சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள். அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா, அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினருக்கு 2.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தின் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ‘வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள். அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.