
இரட்டை இலை சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கா ? அல்லது டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணிக்கா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, இபிஎஸ் மற்றும் டி.டி.வி. தினகரன் அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக . இரண்டு அணியாக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் என செயல்பட்டு வந்தன. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.
அந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.
ஆனால் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட தயாராகின. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியான புகாரை தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி.மு.க. இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து கடந்த இரண்டாவது கட்டமாக கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் , இரு அணி தரப்பிலும் நிர்வாகிகள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
அதன்பின்னர், 3-ம் கட்ட விசாரணையை 23-ந் தேதி தேர்தல் ஆணையம் நடத்தியது.
இதில், எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் மத்திய அரசின் முன்னாள் தலைமை வக்கீல் முகுல் ரோத்தகி, வக்கீல் சேதுராமன் ஆகியோர் ஆஜரானார்கள். டி.டி.வி.தினகரன் தரப்பிலும் வக்கீல்கள் ஆஜரானார்கள். எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், “அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட 95 சதவீத உறுப்பினர்கள் எங்களிடம் தான் உள்ளனர். எங்களுக்குத்தான் பெரும்பான்மை அதிகம் உள்ளது. இரட்டை இலை சின்னத்தையும் எங்களுக்கே ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
டி.டி.வி.தினகரன் அணி தரப்பில், “எங்களுக்கு அதிகப்படியான உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். அதனால், எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை 30-ந் தேதிக்கு அதாவது இன்றைக்கு ஒத்திவைத்தது. இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு அடுத்தகட்ட விசாரணை நடக்கிறது.
விசாரணையில் பங்கேற்பதற்காக, எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். டி.டி.வி.தினகரன் அணி தரப்பில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களில் 10 பேரும், 6 எம்.பி.க் களும் டெல்லி சென்றுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக, இன்று நடைபெறும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, தேர்தல் ஆணையமும் தனது முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.