
தங்களது சுயநலத்துக்காக, மாநில சுய உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
பின்னர், ஸ்டாலின் பேசும்போது, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மாணவர்கள் முன் வர வேண்டும் என்று கூறினார்.
இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற, இந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் முக்கியமானது என்றார்.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டமும் முக்கியமானது என்று கூறினார்.
ஆனால், தற்போது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கில், மாநில உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
குடியரசு மற்றும் துணை குடியரசு தேர்தலின்போது, அதிமுக நினைத்திருந்தால், நீட் தேர்வில் இருந்து எங்களுக்கு விலக்கு அளித்தால்தான் தேர்தலில் ஆதரவளிப்போம் என்று அவர்களால் கூறியிருக்க முடியும், ஆனாலும் அவர்கள் அதை செய்யவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.