கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு காரணம் இதுதான்... டிடிவி.தினகரன் திடுக் தகவல்..!

Published : Jun 15, 2019, 04:15 PM IST
கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு காரணம் இதுதான்... டிடிவி.தினகரன் திடுக் தகவல்..!

சுருக்கம்

குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றே தெரியாத நிலையில் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழக மக்களைத் திசை திருப்பவே புதிதாக ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளதாக டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றே தெரியாத நிலையில் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழக மக்களைத் திசை திருப்பவே புதிதாக ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளதாக டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெறியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளம், ஆறு, கால்வாய் போன்றவற்றைத் தூர்வாரி பராமரிப்பதற்காக 2017-ம் ஆண்டு ரூ.100 கோடியும், 2018-ம் ஆண்டு ரூ.331 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த நிதியைக் கொண்டு குடிமராமத்துப் பணிகளை பெயரளவுக்குச் செய்துவிட்டு வேலை முடிந்துவிட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 

அதனை நிரூபிக்கும் வகையில் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் ஆளுயரத்திற்குப் புதர் மண்டி கிடந்ததையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்மால் பார்க்க முடிந்தது. ஏரி, குளங்களிலும் இதே நிலைமைதான் இருந்தது. இதனால் காவிரி நீர் கடைமடை பாசனப் பகுதிகளுக்குச் சென்று சேரவில்லை என்ற புகாரும் எழுந்தது. அப்படியானால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் எங்கே போனது என்ற கேள்வி எழுகிறது.  
 
இந்நிலையில் நடப்பாண்டில் குடிமராமத்துக்கு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அரசு அறிவித்திருக்கிறது. தமிழகம் முழுதும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தில் மக்கள் தவியாய் தவிக்கும்போது, அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஆட்சியாளர்கள், மக்களைத் திசை திருப்பவே இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.  

குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.499 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாக பழனிச்சாமியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியே என்ன ஆனது என்று தெரியாத நிலையில் பழனிச்சாமி அரசின் புதிய அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலையே ஆகும். 

கடந்த இரண்டாண்டுகளாக குடிமராமத்துப் பணியின் கீழ் எந்தெந்த நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன என்ற வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு எந்தெந்த நீர்நிலைகளில் என்னென்ன பணிகள் நடைபெறவிருக்கின்றன என்ற பட்டியலையும் மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆஃபர்களை அள்ளி வீசும் திமுக.! அவைத்தலைவராகும் ஓபிஎஸ்.?! ரவீந்திரநாத்துக்கு துணை முதல்வர் பதவியாம்.!
திமுகவில் இணைகிறார் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்..! கலகலக்கும் அரசியல் களம்