
ஜெயலலிதா பாணியில் திமுகவை முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவித்துவிட்டது அ.தி.மு.க. அக்கட்சியின் துணை பொது செயலளார் டி.டி.வி.தினகரனே களத்தில் குதித்துவிட்டார். தனக்கு வாய்ப்பு அளித்த ஆட்சி மன்ற குழுவினருக்கும், கட்சியினருக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையில் போட்டியிடுவோம். அதில் எந்த மாற்று கருத்துக்கும் இடம் இல்லை.
சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தி.மு.க. மட்டுமே தமக்கு போட்டி என்றும், மற்றவர்களை எல்லாம் ஒரு போட்டியாக தாம் கருதவில்லை என்று டி.டி.வி. கூறியுள்ளதால், தீபா மற்றும் பன்னீர்செல்வத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என தெரிகிறது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, முன்பெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் என்றே குறிப்பிடுவார். ஆனால் தற்போது,மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். என மரியாதையோடு குறிப்பிட்டார்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு திடீரென தினகரன் மரியாதை கொடுத்ததை பாத்து பத்தரிகையாளர்கள் ஆச்சரியடைந்தனர். இதுமட்டுமின்றி, தனது அணியில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் அண்ணன் என மரியாதையுடன் அழைத்தார் தினகரன்.
ஒரே கல்லில் இரண்டு, மூன்று மாங்காய் அடிக்கும் நோக்கில் தினகரன் அரசியல் சாணக்கிய தனத்தோடு, நடந்து கொள்வதையே இது காட்டுகிறது. மேலும், நான் முதலமைச்சர் ஆக மாட்டேன். எடப்பாடி பழனிச்சாமியைமுதலமைச்சராக நீடிப்பார் என உறுதியும் அளித்தார்.
கடந்த சில நாட்களாக கட்சிக்குள் நிலவி வரும், சிறு சிறு சலசலப்புகளை சரி கட்டவும், ஆர்.கே. நகரில் முடிந்த அளவு மற்ற கட்சிகளின் ஆதரவை பெறவும் தினகரன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ, தினகரன் ஆர்.கே. நகரில் நிலவும் எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல், தைரியமாக களத்தில் குதித்து இருப்பது, அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என குதூகலப்படுகிறார்கள் அக்கட்சியின் தொண்டர்கள்.