நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க. தமிழ்ச்செல்வன், ஏழுமலை, வெற்றிவேல் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளர் பூபதியை சந்தித்து மனு அளித்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பிளவுபட்ட அதிமுக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணி இ.பி.எஸ். அணி இணைப்பு ஏற்பட்டது.
11 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஓ.பி.எஸ். அணியை சேர்த்துக் கொண்டது பதவி ஆசைக்காகத்தான் என்று டிடிவி தினகரன் தரப்பு கூறியது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பின்போது, பொது செயலாளர், துணை பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்கள் என்றும் அதற்காக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
டிடிவி ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியது.
இதையடுத்து, ஆதரவு எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் எதிர் அணியினர் ஈடுபடுவதை தவிர்க்க டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எடப்பாடி அரசு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியது.
ஆனால், ஆளுநரோ, 19 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவிலேயே நீடிப்பதால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கருத முடியாது என்றும், ஒரு கட்சி இரண்டு குழுக்களாக செயல்படுவதால் சட்டப்படி தலையிட முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க. தமிழ்ச்செல்வன், ஏழுமலை, வெற்றிவேல் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளர் பூபதியை சந்தித்து மனு அளித்தனர்.