கொரோனா நோயாளிகளின் அடுத்தடுத்த தற்கொலை..!! புதிய சந்தேகம் கிளப்பும் டிடிவி தினகரன்..!!

By Ezhilarasan BabuFirst Published May 29, 2020, 1:23 PM IST
Highlights

இது உண்மை எனில் பணிக் காலம் முடிந்த பிறகும், கொரோனா நோய் எதிர்ப்புக் களத்தில் பணி புரிந்த அந்த செவிலியருக்கு பழனிச்சாமி அரசு செலுத்தும் நன்றிக் கடன் இதுதானா? 

அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணத்தில்  ஏற்பட்டுள்ள குழப்பம்  திறனற்ற தமிழக அரசு நிர்வாகத்தை காட்டுகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  குற்றம்சாட்டியுள்ளார்,  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனையில் தலைமைச்  செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும் அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் ஒரு மாபெரும் தொற்று நோய் தடுப்பில் அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.  திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் தமிழகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகிறார்களோ என்ற கவலையையும் மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணியாற்றி வந்த  ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது.

கவச உடை அணிந்த ஊழியர்கள்தான் அவரது உடலை வெளியில் கொண்டு வந்திருக்கின்றனர்,  அதன் பிறகு என்ன நடந்ததோ, அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது  பிரிசில்லாவின் கேஸ் ஷீட்டில் covid-19 வைரஸால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக அவரது சகோதரர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்கு கேஸ் ஷீட்டில் யாராவது தவறாக எழுதி இருப்பார்கள் என்று ஒரு அலட்சியமான பதிலை மருத்துவமனை தரப்பு அளித்திருக்கிறது.  இது எவ்வளவு பெரிய துயரம்,  தலைமையில் செவிலியருக்கே இந்த நிலைமை என்றால், மற்ற நோயாளிகளின் கதி என்ன? இந்த லட்சணத்தில் சுகாதாரத்துறை நிர்வாகம் செயல்படுகிறதா? கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்ததாக சொன்னால் அதற்கான இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

இது உண்மை எனில் பணிக் காலம் முடிந்த பிறகும், கொரோனா நோய் எதிர்ப்புக் களத்தில் பணி புரிந்த அந்த செவிலியருக்கு பழனிச்சாமி அரசு செலுத்தும் நன்றிக் கடன் இதுதானா? தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா தடுப்பு பணியில் போராடி வரும் மருத்துவத் துறையினருக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா?  இதை பார்த்தபிறகு அரசு மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பற்றி மக்களிடம் புதிய சந்தேகங்களும், பயமும் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நிலைமை கவலைக்கிடமாகி கொண்டே செல்கிறது. இதிலெல்லாம் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஊடகங்களிடம் வீராவேசமாக, உருக்கமாகவும்,  மாறிமாறி சினிமா வசனங்களைப் போல பேசுவது மட்டுமே போதும் என்று முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா?  என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்கு உண்மையான அக்கறையோ ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களோ இல்லாத இவர்களின் செயல்பாடுகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதையாவது உணர்வார்களா? என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

 

click me!