ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி...!! ஒரே நொடியில் தூக்கிப்போட்ட எடப்பாடி பழனிச்சாமி..!!

By Ezhilarasan BabuFirst Published May 29, 2020, 12:25 PM IST
Highlights

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இனி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க படமாட்டார்கள் என   வாக்குறுதி அளித்தது.

அவுட் சோர்சிங் முறையில் மருத்துவர்களை நியமிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.   இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு ‘வெளி கொணர்தல்’(Out Sourcing)முறையில் 450 மருத்துவர்களை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமிக்க உள்ளது. அதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு மாதம்  ரூ 40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் . மூன்று மாதங்களுக்கு மட்டுமே இந்த பணி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. தமிழக அரசின் இப்பணி நியமனம் கடும் கண்டனத்திற்குரியது.2005 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், 2500 மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தார். அவர்களுக்கு வெறும் ரூபாய் 8000 மட்டுமே மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.  அம்மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சமூக  சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ச்சியாக  நடத்தியது.

 அப்போராட்டங்களின் காரணமாக ஜெ.ஜெயலலிதா அவர்கள்,  2006 சட்டமன்றத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியில்,  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இனி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படமாட்டார்கள் என அன்று  வாக்குறுதி அளித்தார். அதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இனி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க படமாட்டார்கள் என   வாக்குறுதி அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும்  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த மருத்துவர்களை  பணி நிரந்தரமும் செய்தது. அதற்காக தமிழக அரசிற்கும், அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் மாநாட்டை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நடத்தியது.

 திமுக அதன் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கவில்லை. தனது வாக்குறுதியை காப்பாற்றியது. இன்றைய தமிழக அரசு, மருத்துவர்களை வெளிகொணர்தல் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிப்பது  முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ.ஜெயலலிதா  அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு எதிரானது.`தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ என்ற  அமைப்பு இருக்கும் போது, மருத்துவர்களை, மருத்துவ ஊழியர்களை விரைவாக பணி நியமனம் செய்வதற்காகவே ‘மருத்துவப் பணியாளர் பணிநியமன ஆணையம்’(எம்ஆர்பி) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதை மாபெரும் சாதனையாகவும் அஇஅதிமுக அரசு கூறிக்கொள்கிறது. ஆனால், தற்பொழுது, அந்த அமைப்பின் மூலம் மருத்துவர்களை பணி நியமனம் செய்யாமல், வெளி கொணர்தல் முறையில்  நியமனம் செய்வது சரியாகாது. இது தமிழக அரசின் அப்பட்டமான மருத்துவர்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்துகிறது. 

 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கோரி போராடிய மருத்துவர்களை  பழிவாங்கும் நோக்குடன் இடமாறுதல் செய்தது தமிழக அரசு.பின்னர், மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற காரணத்தைக் காட்டி, அதே தமிழக அரசு கௌரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்க முயன்றது. கடும் எதிர்ப்பின் காரணமாக அதை கைவிட்டது. தற்பொழுது வெளி கொணர்தல் முறையில் மருத்துவர்களை நியமிக்க முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இம்முடிவை உடனடியாக கைவிட வேண்டும். ஏற்கனவே ,மருத்துவக் கல்லூரிகளில் இருந்து ,டிஎம்எஸ், டிபிஎச் பிரிவுக்கு பழிவாங்கும் நோக்குடன் ,இடமாறுதல் செய்யப்பட்ட மருத்துவர்களை மீண்டும் அவர்கள் பணிபுரிந்த மருத்துவக் கல்லூரிகளுக்கே இடமாறுதல் செய்ய வேண்டும்.

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, டிஎம்எஸ்,டிபிஎச் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்களை விருப்பத்தின் அடிப்படையில் ,மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்ற வேண்டும். பல ஆண்டுகளாக அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிந்து வரும் அவர்களின் பணி அனுபவத்தோடு, அவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பின் துறை சார்ந்த அறிவும்  நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதைவிடுத்து ,புதிய மருத்துவர்களை நேரடியாக மருத்துவக் கல்லூரிகளில் நியமிப்பது சரியல்ல.எனவே,தமிழக அரசு ,எம்ஆர்பி மூலமாக, நேரடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசின் வற்புறுத்தலின் அடிப்படையில் வெளி கொணர்தல் முறையில் மருத்துவர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
 

click me!