டிடிவி தினகரனை தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ ரங்கசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
இரட்டை இலை விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று வெளியே வந்தார்.
அப்போது கட்சி பணிகளில் மீண்டும் பணியாற்றுவேன் என தெரிவித்தார். ஆனால் அதற்கு எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்தது.
ஏற்கனவே டிடிவி அறிவித்தபடி கட்சியை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
பின்னர், சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி அதிமுகவில் இருந்து என்னை விலக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் இன்னும் 6 மாத காலம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு என் பணிகளை தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, திடீரென அதிமுகவை சேர்ந்த 33 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசும், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ வி.பி.சுப்ரமணியும் அடுத்தடுத்து டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ ரங்கசாமி அடையாரில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் தினகரனின் ஆதரவு பெருகி கொண்டே செல்கிறது. இதனால் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.