
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவிக்க காலை 9.30 மணி என போலீசார் நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தனர்.
இதற்காக நேற்று முன்தினம் இரவே மதுரை பை–பாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஒட்டலில் டி.டி.வி.தினகரன் வந்து தங்கி இருந்தார். நேற்று காலை அவர், மாலை அணிவிக்க ஓட்டலில் இருந்து 9 மணிக்கு வேனில் ஊர்வலமாக புறப்பட்டார்.
வழிநெடுகிலும், ஆயிரக்கணக்கான அவரது கட்சியினர் வரவேற்பு கொடுத்த வண்ணம் இருந்தனர். அவருக்கு மாலை அணிவித்தும், சால்வைகள் போர்த்தியும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். இதனால் டி.டி.வி.தினகரனால் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு வரமுடியவில்லை.
இதற்கிடையில் காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிக்க போலீசார் நேரம் கொடுத்து இருந்தனர். எனவே அ.தி.மு.க.வினரும் பெரியார் பஸ் நிலைய பகுதியில் திரண்டு வந்து இருந்தனர். ஏற்கனவே அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் குவிந்து இருந்தனர்.
எனவே இரு தரப்பினரும் மாறி, மாறி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே போலீசார், டி.டி.வி.தினகரன் காலை 11 மணிக்கு மாலை அணிவிக்குமாறு கூறினர். மேலும் அங்கிருந்த இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
பின்னர் காலை 11.30 மணிக்கு டி.டி.வி.தினகரன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டி.டி.வி.தினகரனை பார்க்க சாலையின் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான பெண்களும், பொது மக்களும் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.