அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக்..! ஸ்டாலின் இரட்டை வேடம்..! - சீறும் டிடிவி தினகரன்

By Thanalakshmi VFirst Published Nov 29, 2021, 2:54 PM IST
Highlights

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலினின் அரசு அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் மக்கள் நலத்திட்டங்களில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை திமுக அரசு சத்தமில்லாமல் இருட்டடிப்பு செய்யும் வேலைகளை செய்வது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
 

கடந்த சில நாட்களுக்கு முன், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தோடு, மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி படமும் சேர்க்கப்பட்டு, புது பெயர்பலகை திடீரென ஒட்டப்பட்டது. இதனையடுத்து, அம்மா உணவகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் வைரலானது.

இதற்கு, அதிமுகவினர் தங்களது கண்டங்களையும் தெரிவித்தனர்.  ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை, திமுக அரசின் மறைக்கும் முயற்சியானது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனை ஓய்யும் முன், தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு , அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தற்போது, சேலம் நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் அம்மா மினி கிளினிக்கில் பெயர் பலகையை எடுத்து விட்டு, 'முதல்வரின் மினி கிளினிக்' என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.அந்த பெயர் பலகையில், தற்போதைய முதலமைச்சர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் "மக்கள் நலத்திட்டங்களில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகளை சத்தமில்லாமல் தி.மு.க அரசு மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். மேலும் ஏழை,எளிய மக்கள் பசியாறுவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  கொண்டுவந்த அம்மா உணவகங்களை சீர்குலைப்பதற்கான வேலைகளை திமுக அரசு, ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் அவற்றை மொத்தமாக மூடுவதற்கு திட்டமிட்டு கருணாநிதி பெயரில் உணவகங்களை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டியுள்ளார்.

மக்கள் நலத்திட்டங்களில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகளை சத்தமில்லாமல் தி.மு.க அரசு மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. (1/4)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

ஒரு பக்கம் ரொம்பவும் அரசியல் நாகரீகம் வாய்ந்தவராக தன்னை காட்டிக்கொள்ள,'அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவரது அரசு அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது என்று விமர்சித்துள்ளார்.  ஆனால் இப்போது 'அம்மா மினி கிளினிக்'கையும் பெயர் மாற்றம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக-வும் ஸ்டாலினும் மறந்துவிடக்கூடாது என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

அம்மா மினிகிளினிக் பெயர் பலகை மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கண்டன்ம் தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், தி.மு.க.,வினரின் கட்டுப்பாட்டில் தான் அரசு அதிகாரிகள் இருக்கின்றனர் என்பதும் அரசு நடவடிக்கைகளில் தி.மு.க.வினர் தலையிடுகின்றனர் என்பதும் தெளிவாக உறுதி செய்யப்படுகிறது. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே தலையிட்டு, பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகையை, அங்கே பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

சேலம், நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்த பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது? என்பதை ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். pic.twitter.com/seDg9VZEgX

— O Panneerselvam (@OfficeOfOPS)
click me!