ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக யாருக்கு ஆதரவு.? தொண்டர்களுக்கு உத்தரவிட்ட டிடிவி தினகரன்

By Ajmal KhanFirst Published Feb 8, 2023, 1:05 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்த  டிடிவி. தினகரன், இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் 4 ஆக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் சிதறியதால் எதிர்கட்சிகள் எளிதில் வெல்லும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில்  ஈரோடு இடைத்தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என 3 பிரிவாக போட்டியிடும் நிலை ஏற்பட்டது. இந்த பரபரப்பான நிலையில்  ஓபிஎஸ் பின்வாங்கினார். குக்கர் சின்னம் கிடைக்காத காரணத்தால் டிடிவியும் தேர்தலில் போட்டியில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதன் காரணமாக அதிமுகவின் ஓட்டுகள் ஒன்றினைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இடைத்தேர்தலில் இருந்து பின் வாங்கியது ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

பாஜக அழைக்கவில்லை

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் எங்களுக்கு வழங்கவில்லை என்பது புரியவில்லை என கூறினார்.  2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லையெனவும் தெரிவித்தார். பாஜகவிடம் இருந்து இடைத்தேர்தல் தொடர்பாக எங்களுக்கு எந்த வித அழைப்பும் வரவில்லை. நாங்கள் எந்த அணியிலும் இல்லை, தனித்தே இருக்கிறோம், நாடாளுமன்ற தேர்தலில் புதுக் கூட்டணி உருவாக்குவது பற்றி யோசிப்போம் என தெரிவித்தார். 

யாருக்கு ஆதரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்த  டிடிவி. தினகரன்இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும் என கூறினார்.  ஓ.பன்னீர்செல்வம் எனது முன்னாள் நண்பர், எனக்கு அவர் மீது பிரியம் உண்டு, அவரது நிலைப்பாடு குறித்து நான் கருத்து கூற முடியாது தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் உள்ளதாக குறிப்பிட்டவர் இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். 

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுகவிற்கு அதிகரிக்கும் ஆதரவு .! பாஜகவை தொடர்ந்து இபிஎஸ்க்கு கை கொடுத்த முக்கிய கட்சி
 

click me!