தேர்தல் பிரச்சாரத்தில் திடீர் டுவிஸ்ட்... விதியை மீறினால் 6 மாதம் சிறை... போக்குவரத்து துறை ஆணையர் எச்சரிக்கை!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 10, 2021, 2:30 PM IST
Highlights

பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள், வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிக்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கிட்டதட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் குறித்த விவரங்களை இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பொதுக்கூட்டம், பிரச்சாரம் என தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ளது. 

பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள், வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை ஆணையர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் கீழ்கண்ட நடவடிக்கைகள் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலம் எடுக்கப்படும்.

 மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 66 (1) மற்றும் பிரிவு 207-ன் கீழ் அனுமதிச் சீட்டு மற்றும் பதிவுச் சான்றை மீறிய குற்றத்திற்காக வாகனம் சிறை பிடிக்கப்படும் என்றும்,  மேற்கண்ட குற்றத்திற்காக சிறை பிடிக்கப்பட்ட வாகனம் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 421-ன் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 192 (A)-ன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.10 ஆயிரம் நீதிமன்றத்தால் விதிக்கப்படும், சிறை பிடிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதிச் சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழு உத்தரவின்படி ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்பதால்,  பொதுமக்களைச் சரக்கு வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றால், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள் என கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

click me!