இன்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி… சசிகலா,  தினகரன் நீக்கப்படுவார்களா ?

First Published Aug 10, 2017, 8:53 AM IST
Highlights
today meeting a t royapetai admk office headed by edappadi palanisamy


பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் வருகிறார். அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் பல அதிரடி முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓபிஎஸ்  அணியும் இணைய வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது.

ஆனால் மத்தியஅரசு தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக, மீண்டும் இரு அணி சார்பிலும் ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து முழுமையாக விலக்கி வைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் அணியின்  கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

ஆனால் அதை எடப்பாடி அணியினர் அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினரும், பாஜகவும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே டி.டி.வி.தினகரன் அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இந்த குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் நேற்று தினகரன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலரை நீக்கிவிட்டு, புதிதாக நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டார்.

இதுவும் எடப்பாடி அணியினரை ஆத்திரமூட்டியுள்ளது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இன்று கட்சியின் தலைமை அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி பல முக்கிய முடிவுகள் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவி ஏற்பு விழாவில் ஓபிஎஸ்ம் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள உள்ளனர். அப்போது பாஜக முன்னிலையில் இணைப்பு பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்குள் சசிகலா தரப்பின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக முக்கிய அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என எதிர்பர்க்கப்படுகிறது.

 

click me!