தனது பிறந்த நாளையொட்டி நள்ளிரவில் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது 68-வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். வழக்கமாக தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். தேமுதிகவினர் வழக்கம்போல விஜயகாந்த் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காராணமாக தன் வீட்டிலேயே எளிமையாக தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜயகாந்த்.
தன் பிறந்த நாளையொட்டி தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை நள்ளிரவில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் பகிர்ந்துள்ளார். அந்தப் பக்கத்தில் விஜயகாந்துக்கு ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள். இதற்கிடையே பிறந்த நாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், “25-ந் தேதியன்று (இன்று) பிறந்தநாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.