அப்போ கசந்தது… இப்போ இனிக்குது…. எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த திமுக அரசு…!

By manimegalai aFirst Published Oct 12, 2021, 3:55 PM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி ஆட்சியில் புயலைக் கிளப்பிய விவகாரங்களில் சென்னை – சேலம் எட்டு வழி சாலை திட்டமும் ஒன்றாகும். கடைசிவரை எடப்பாடி உறுதியாக இருந்தாலும் மக்களின் போராட்டங்கள், அரசியல் கட்சிகள் நீதிமன்றங்களை நாடியும் இந்த திட்டத்திற்கு தடைபோட்டது. அப்போது எட்டு வழி சாலை திட்டத்தை நேரடியாக எதிர்க்காவிட்டாலும் போராடும் மக்களுக்கு திமுக ஆதரவாக இருந்தது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, மத்திய அரசிடம் வைத்த கோரிக்கைகளை பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் சார்பில் 500 கிலோமீட்டர் தூரம் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை துரிதமாக முடிக்க கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை-துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். மதுரை, கோவை மாநகரில் வட்ட சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சியை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுங்கச் சவடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக வேலு கூறினார்.

மேலும், உழுந்துபேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் உள்ள இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.  திருச்சியில் பேருந்து முனையம் அமைக்க வேண்டும்.  கோவையில் எல்.என்.டி கட்டுப்பாட்டில் உள்ள 22 கிலோ மீட்டர் தொலைவு சாலை இருவழி சாலையாக உள்ளது. அதனை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும்.

மிக முக்கியமாக, சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை திருச்சி வரை 8 வழியாகவும், திருச்சி - கன்னியாகுமரி இடையே 6 வழிச் சாலையாக மாற்றவும் கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ஏ.வ.வேலு, கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவை சொல்வதாக நிதின் கட்காரியும் உறுதியளித்திருக்கிறார்.

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டதிற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்த திமுக, தற்போது சென்னை முதல் திருச்சி வரை 8 வழிச்சாலை அமைகக் கோரிக்கை வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

click me!