இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் வேகம் அதி தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 26,465 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 23ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. இப்படி கோரதாண்டவம் ஆடும் கொரோனா தொற்று புதிய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். ஆக்ஸிஜன் இருப்பு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கை வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஸ்டான்லி மருத்துவமனையில் 1,950 கொரோனா படுக்கைகள் உள்ளன. ஏற்கனவே 1,200 படுக்கைகள் இருந்த நிலையில், 750 கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு 1,950 படுக்கைகள் உள்ளன. 800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன. சாதாரண படுக்கைகள் 100 வரை காலியாக உள்ளன என தெரிவித்தார்.
ஏற்கனவே முதலமைச்சர் தமிழகத்தில் புதிதாக 12,500 ஆக்ஸிஜன் வசதி அடங்கிய படுக்கைகள் அமைக்க உத்தரவிட்டுள்ள நிலையில், மேலும் 12,500 படுக்கைகள் தேவை என மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து சென்னை கீழ்பாக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை வாங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒரே இடத்தில் கூடுவது கொரோனா நேரத்தில் நல்லது அல்ல. எனவே மக்களின் சிரமத்தை குறைக்க கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலியில் விநியோகம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பேரிடர் நிலையை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். கொரோனா காலத்தில் தினந்தோறும் ஆய்வுகள் நடத்தி, மக்களை இடர்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தமிழகத்தில் இப்போது இல்லை. இனியும் ஏற்படாது என உறுதியாக தெரிவித்தார்.