கண்கலங்கிய அதிமுக தொண்டர்கள்... ஸ்டாலின் கொடுத்த பிறந்தநாள் பரிசு!!

By Narendran SFirst Published Feb 24, 2022, 4:12 PM IST
Highlights

ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளையொட்டி நாளிதழ்களில் திமுக அரசு தந்துள்ள விளம்பரம் பல்வேறு தரப்பினர் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை, தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல, தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்நிலையில், நாளிதழ்களில் இன்றைய தினம் திமுக அரசு ஒரு விளம்பரம் தந்துள்ளது. அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரம் தந்துள்ளது.

அந்த விளம்பரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, சீர்மிகு பெருமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள். நாள்:24.2.2022, வியாழக்கிழமை, நேரம்: காலை 10,00 மணி, இயக்குனர், செய்தி - மக்கள் தொடர்புத்துறை சென்னை என்று அந்த விளம்பரம் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. அரசு சார்பில் தரப்பட்ட இந்த விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதிமுகவின் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக அரசு தமிழ் நாளிதழில் இப்படி விளம்பரம் செய்துள்ளது.

ஆனால் அதிமுக ஆட்சியில் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு இதுபோன்ற விளம்பரங்களை பார்த்ததாக நினைவில்லை. தமிழகத்தின் பெருந்தன்மை கொண்ட தலைவராக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார் என்று ட்விட்டர்வாசிகள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். சிலருக்கு ஸ்டாலினின் இந்த அணுகுமுறை புதிதாக இருந்தாலும், இயல்பாகவே மாற்று கட்சியினரை மதிக்கக்கூடிய பண்பு அவரிடம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. இப்போது சட்டசபையில் அந்த மாண்பை நேரடியாக பலர் பார்க்க நேர்ந்தாலும், இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ஒரு நிகழ்வை குறிப்பிடலாம். ஜெயலலிதா இறந்தபோது, திமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டார் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின். பிறகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் ட்வீட்டும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!