மதுரை சித்திரைத் திருவிழா சிக்கல்....தமிழக தேர்தல் தேதியில் மாற்றம் வருமா?...

By Muthurama LingamFirst Published Mar 11, 2019, 10:39 AM IST
Highlights

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும்  அதே நாளில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்று மாலைக்குள்  தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் தேதியில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும்  அதே நாளில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்று மாலைக்குள்  தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் தேதியில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18ம் தேதி மதுரை சித்திரை திருவிழாவின் உச்சகட்டமான மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டமும், அதே நாளில் அழகர் எதிர்சேவையும் நடைபெறுவதால் சிக்கல் எழுந்துள்ளது. தென்மாவட்டம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் கூடுவார்கள் என்பதால் தேர்தல் பாதுகாப்பு குறித்து கேள்வி கிளம்பியுள்ளது.

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் உச்சகட்டமாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துக்கு மறுநாள் ஏப்ரல் 18ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தொடங்கும் தேரோட்டம் 4 மாசி வீதிகள் சுற்றி மீண்டும் நிலைக்கு வருவதற்கு பகல் 12 மணி வரை ஆகும். இதில் பல லட்சம் மக்கள் திரள்வார்கள். அதோடு இதே ஏப்ரல் 18ல் அழகர் எதிர்சேவையும் நடக்கிறது. இந்த உற்சவம் அன்று அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து விடிய விடிய நடைபெற்று ஏப்ரல் 19ல் காலை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் நடைபெறும்.

அழகர் எதிர்சேவை மற்றும் ஆற்றில் இறங்குவதை தரிசிக்க மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து வருவார்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவார்கள்.

இதே நாளில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது, தென்மாவட்ட பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. முக்கிய திருவிழாக்கள் தேதியை மாவட்ட நிர்வாகத்தில் முன்கூட்டியே கேட்டு அறிந்து தான் தேர்தல் தேதி விவரங்கள் முடிவாகும்.  திருவிழா தேதியை மாற்ற முடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்னை எழக்கூடும் என்பதால், தேர்தல் ஆணையம் மறு ஆய்வு நடத்தி, தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும். அதே நாளில் தேர்தல் நடத்தினால் மக்கள் வாக்களிப்பதில் கடும் சிக்கல் எற்படும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜனிடம் கேட்டபோது,’எங்களைப் பொறுத்தவரை குறித்த தேதியில் தேரோட்டம் நடக்கும். திருக்கல்யாணம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட விஷயம். தேர்தலுக்காக மாற்றி அமைக்க வாய்ப்பே இல்லை’ என்றார்.

click me!