தமிழகத்தில் என்.பி.ஆர். பணிகள் கூடாது... அரசாணையை ரத்து செய்யுங்க...எடப்பாடி அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!

By Asianet TamilFirst Published Jan 18, 2020, 8:15 AM IST
Highlights

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டும் இருவேறு நோக்கங்கள் கொண்டவை. இவை இரண்டையும் இணைத்து 2020, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடுவது மக்களை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். இவற்றை இந்திய குடிமக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

தமிழகத்தில் மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.)பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக  பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:


 “மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டையும் இணைத்து ஒரேநேரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைக் குழு கூட்டத்தை மத்திய அரசு டெல்லியில் நடத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பும், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடும் ஒன்றல்ல. சென்சஸ் சட்டம் 1948ல் கொண்டுவரப்பட்ட சட்டம். இது மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை உருவாக்க தேவையான புள்ளி விவரங்களை வழங்குகிறது. தற்போது ‘ஆதார்’ அட்டையும் இத்தகைய பயன்பாட்டுக்கு உதவுகிறது.  
ஆனால், மக்கள் தொகை பதிவேடு என்பது அப்படிப்பட்டது அல்ல. குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்பது ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், ஒவ்வொருவரும் தான் இந்திய குடிமகன் என்பதற்கான  தன்னுடைய வாழ்வாதாரத்துக்கான ஆதாரங்கள் சமர்ப்பிப்பதை கட்டாயப்படுத்துகிறது. இதனால், சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டும் இருவேறு நோக்கங்கள் கொண்டவை. இவை இரண்டையும் இணைத்து 2020, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடுவது மக்களை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். இவற்றை இந்திய குடிமக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெறுவதாக உள்ள மக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்திவைக்க வேண்டும், இப்பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நியமனம் செய்வதற்காக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.”  என்று பாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

click me!