டெல்லி விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... குடியரசுத் தலைவரைச் சந்தித்தது ஏன்?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 19, 2021, 03:35 PM IST
டெல்லி விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... குடியரசுத் தலைவரைச் சந்தித்தது ஏன்?

சுருக்கம்

தமிழக முதல்வராக பொறுப்பெற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.   

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லி சென்றடைந்தார். நேற்றிரவு டெல்லியில் தங்கிய முதலமைச்சர், இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். சந்திப்பின் போது தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். 

குடியரசுத் தலைவருடனான சந்திப்பிற்கு பிறகு டெல்லி விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை தலைமைத் தாங்கி நடத்த குடியரசுத்தலைவருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். அந்த விழாவில் சட்டமன்ற வளாகத்துக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்ற செய்தியையும் தெரிவித்திருக்கிறேன். 

மதுரையில் கருணாநிதியின் பெயரில் அமையவிருக்கும் நூலகம், சென்னை கிண்டியில் அமையவிருக்கும் அரசு மருத்துவமனை, சென்னை கடற்கரை சாலையில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியிருப்பதை குறிக்கும் வகையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் அமைக்கும் பணி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளேன். அதற்கு ஒப்புதல் அளித்ததோடு, தேதியை ஒரிரு நாட்களில் தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசவில்லை எனத் தெரிவித்த முதல்வர், அதுகுறித்து நீதிமன்றத்தை நாட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியும் கர்நாடகாவின் செயலைக் கண்டித்துள்ளோம். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லிக்கு வந்து மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மத்திய அமைச்சரும் மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கப்படாது என உறுதி அளித்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!