சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்,
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் நிலவுவதாலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், வானமாதேவி (கடலூர்) 7 சென்டி மீட்டர் மழையும், சூலகிரி (கிருஷ்ணகிரி) 6 சென்டி மீட்டர் மழையும், ஓசூர் (கிருஷ்ணகிரி) கடலூர், மரக்காணம் (விழுப்புரம்) கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 5 சென்டிமீட்டர் மழையும், செய்யூர் (செங்கல்பட்டு) தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அக்டோபர் 22ஆம் தேதி வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 23ஆம் தேதி வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.