
ஈரோடு
தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாய் உள்ளது என்று டி.டி.வி. தினகரன் சாடினார்.
அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் நேற்று மாலை ஈரோடு மாவட்டம், பவானிக்கு வந்தார்.
பவானி அருகே சித்தோடு நால்ரோட்டுக்கு வந்த தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "இந்த ஆட்சி குரங்கின் கையில் கிடைத்த பூ மாலையாய் உள்ளது.
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என யாருக்கும் அதிகாரம் இல்லை. எல்லா அதிகாரமும் பொதுச் செயலாளருக்கே உண்டு.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன், செம்மலை ஆகியோர் மத்திய அரசுக்கு தலைவணங்கி உள்ளனர். மேலும், மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
நீதிமன்றத்தின் மூலமும், தேர்தல் மூலமாகவும் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.
வருமான வரித்துறையின் எந்த வழக்கையும் சந்திக்க தயார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பொதுச்செயலாளரிடம் கலந்து பேசி தேர்தலை சந்திப்போம்" என்று அவர் கூறினார்.