உச்சநீதிமன்ற ஆணையின்படி தகுந்த சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குங்க.. தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2021, 5:02 PM IST
Highlights

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா அவர்கள் தலைமையில்  19.05.2021 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கைதிகளுக்குப் பிணை வழங்குவதுகுறித்து 9 பரிந்துரைகளை அக்குழு அரசுக்கு அளித்தது. 

உச்சநீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளுக்குப் பிணை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைவாசிகளுக்குப் பிணை வழங்கவேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை மேலும் காலந்தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

இந்தியா முழுவதிலுமுள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளின் உயிருக்கு கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தைக் கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து 2020 ஆம் ஆண்டு வழக்கு பதிவுசெய்து விசாரித்தது. கைது நடவடிக்கையை முடிந்தவரை தவிர்க்க வேண்டுமெனவும், மாநில அரசுகள் உயர் அதிகாரக் குழுக்களை அமைத்து தகுதியான கைதிகளைப் பிணையில் விடுவிக்கவேண்டுமெனவும் ஆணையிட்டது. அந்த வழக்கை மீண்டும் விசாரித்து  07.05.2021 அன்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. 2020ஆம் ஆண்டு  பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரக் குழுக்களின் பரிந்துரைகளின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் 90 நாட்களுக்குப் பிணை வழங்க வேண்டுமென்று அந்த உத்தரவில் தெரிவித்திருந்தது. 


 
இந்நிலையில் நேற்று (16.07.2021) மீண்டும் அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ’தனது ஆணையின்படி பிணை வழங்கப்பட்டவர்கள் எவரையும் இப்போது சிறையில் அடைக்கக் கூடாது, உச்சநீதிமன்றம் அடுத்து ஆணை பிறப்பிக்கும் வரை அவர்கள் அனைவரையும் தொடர்ந்து பிணையில் இருக்க அனுமதிக்க வேண்டும்’என்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு உயர்அதிகாரக் குழு ஒன்றை அமைத்தது. சிறைத்துறை டிஜிபி, உள்துறை இணை செயலர், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா அவர்கள் தலைமையில்  19.05.2021 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கைதிகளுக்குப் பிணை வழங்குவதுகுறித்து  9 பரிந்துரைகளை அக்குழு அரசுக்கு அளித்தது. ஆனால் அதன்படி எவருக்கும் இதுவரை பிணை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனிடையில் உச்சநீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் மேலும் சில ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. பிணை வழங்குவதில் கைதியின் வயது, அவருக்குள்ள இணை நோய்களின் விவரம் ஆகிய அம்சங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

ஏற்கனவே தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள கைதிகள் நூற்றுக் கணக்கானோர் கொரோனாவால்பாதிக்கப்படடுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், உயர் அதிகாரக் குழு பரிந்துரைத்தும் கைதிகளுக்குப் பிணை வழங்காதது ஏன் என்பது புரியவில்லை. இனியும் இதில் காலந்தாழ்த்தாமல் உடனடியாக தகுதியான கைதிகளுக்குப் பிணை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!