பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கணும்.. அதிமுக, பாஜக வழியில் கேட்கும் திருமாவளவன்.!

By Asianet TamilFirst Published Nov 5, 2021, 9:22 PM IST
Highlights

எந்த மாநில அரசும் பெட்ரோல் விலையைக் குறைப்பதற்கு முன்பாக முந்தி கொண்டு தமிழக அரசு குறைத்தது. அதே போல் டீசல் விலையும் குறைப்பார்கள் என நம்புகிறோம்.

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். அப்போது அவர் கூறுகையில், “திரிபுராவில் கடந்த சில வாரங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிராக மிக மோசமாக வன்முறையைப் பாஜக கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். உ.பா சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள், இஸ்லாமிய பெரியோர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறேன். எந்த மாநில அரசும் பெட்ரோல் விலையைக் குறைப்பதற்கு முன்பாக முந்தி கொண்டு தமிழக அரசு குறைத்தது. அதே போல் டீசல் விலையும் குறைப்பார்கள் என நம்புகிறோம். பெட்ரோல், டீசல் மீதான மீதான மதிப்புக்‌ கூட்டு வரியினை தமிழக அரசு குறைக்க வேண்டும். 

திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர் என்றும் அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறள் நூலை எழுதினார் என்றும் நூல் ஆசிரியர் தெய்வநாயகம் கூறிய கருத்து ஆய்வுக்கு உரியது.  அரசின்  நலத்திட்டங்களை பெற முடியாத நிலையில் உள்ளனர். எனவே, அவர்களுடைய நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இதுதான் நீண்ட நாள் கோரிக்கை. குறிப்பாக சாதி சான்றிதழ், இதர அரசின் நலத்திட்டங்களை அவர்கள் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளில் குறவர்களை கைது செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்த விஷயத்தில் புலனாய்வு இல்லாமல் அந்த மக்களை கைது செய்வதை தவிர்க்க உரிய செயல்திட்டத்தை முதல்வர் உருவாக்க வேண்டும். பூஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற தமிழக முதல்வரின் நிகழ்ச்சிகளைக் குதர்கமாக கருத்தில் கொள்ள வேண்டியவை அல்ல .பழங்குடியினருக்கு, பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்குவது அரசின் செயல்திட்டங்களில் ஒன்றுதான்” என்று திருமாவளவன் தெரிவித்தார். 

முன்னதாக பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய திருக்குறள்  நூலை திருமாவளவன் வெளியிட்டார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள். மதமும் கடவுளும் வேண்டாம் எனச் சொல்வோரின் எண்ணிக்கை பெருகுவதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. சைவமும் வைணமும் ஆரிய மதம் அல்ல. இந்தியாவில் உள்ள 108 வைணவ கோயில்களில் 106 தமிழ்நாட்டில்தான் உள்ளது. பெரும்பாலான சைவ கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், தமிழர்கள், ஆதிசங்கரர், ராமானுஜர் , மத்வர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். மதங்களை உருவாக்கவில்லை.” என்று திருமாவளவன் பேசினார். 

click me!