உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய அளவிலான எண்ணிக்கையில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென இக்கூட்டம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துத் துணைத் தலைவர் பதவிகளிலும் தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
சென்னை மாநாகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அதை கோரிக்கையாக முன் வைத்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (08-11-2019)காலை 10 மணியளவில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னை அசோக் நகரில் உள்ள -அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.
அக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு...
1) சென்னை பெருநகர மாநகராட்சி பெரும்பான்மையாக தலித் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகும். இத்தொகுதியை ஏற்கனவே தனித்தொகுதியாக அறிவித்திருக்க வேண்டும். தொடர்ந்து ஏனோ இது புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சென்னை அல்லாத பிற மாநகராட்சிகளிலிருந்தே தனித்தொகுதி தேர்வுசெய்யப்படுகிறது. இந்த ஐந்தாண்டுகளுக்கான தனித்தொகுதியாக சென்னைப் பெருநகர மாநகராட்சியைத் தேர்வு செய்து அறிவிக்க வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
2)உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித் மற்றும்பழங்குடியின மக்களுக்கு உரிய அளவிலான எண்ணிக்கையில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென இக்கூட்டம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. 3) உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துத் துணைத் தலைவர் பதவிகளிலும் தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4) அய்யன் திருவள்ளுவருக்குக் காவி உடுத்தி, திருநீறுபூசி அவர்மீது மதம்சார்ந்த அடையாளத்தைத் திணித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிற தமிழ்நாடு பாஜகவினர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைமீது சாணி அடித்தும் காவித்துணி போர்த்தி உருத்ராட்சம் அணிவித்தும் அவரை அவமதித்த சமூகவிரோதிகள் ஆகியோரைக் கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டுமெனவும்; கடந்த காலங்களில் இருந்ததைப்போல அரசுப் பேருந்துகளில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவப்படம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றை அமைத்திட வேண்டுமெனவும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.