கேரள முதல்வருடன் தொல். திருமாவளவன் சந்திப்பு

First Published Oct 23, 2017, 11:17 AM IST
Highlights
Thirumavalavan Meeting with Kerala Chief Minister


கேரள கோயில்களில் அர்ச்சகர்களாக பணிபுரிய தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

கேரளாவில்  திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டின் கீழ் 1,248 கோயில்கள் உள்ளன. அவற்றில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.

அந்த அடிப்படையில் தகுதியானவர்களை பரிந்துரைக்கும் பொறுப்பு தேவஸ்வம் வாரியத்துக்கு உண்டு. அதன்படி, பிராமணியர் அல்லாத 30 பேரும், பிராமணர்கள் 26 பேரும், தலித்துகள் 6 பேரும் அப்பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டனர்.

கேரள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறையாகும். இதனால் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வரும் கேரள அரசுக்கு  பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு, நடிகர் கமல் ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம், சிபிஐ கட்சியின் மாநில தலைவர்கள். உள்ளிட்ட பலர் பினராயி விஜயனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

கோயில் அர்ச்சகர்களாக தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களை கேரள அரசு நியமனம் செய்ததற்கு அப்போது திருமாவளவன் நன்றி தெரிவித்தார். தலித்துக்களை கோயில் அர்ச்சகர்களாக நியமித்து நாட்டுக்கே வழிகாட்டியுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொல்.திருமாவளவன் புகழாரம் சூட்டினார்.

click me!