
மேடைகளில் எடப்பாடி அரசை கிழி கிழி என கிழித்து விட்டு பேட்டியளிக்கும்போது மட்டும் இரு அணிகளின் பேச்சுவார்த்தை நல்ல முறையில் உள்ளது என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார்.
தமிழகத்தில் தற்போது எடப்பாடி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசு இப்பவோ அப்போவோ என கத்தியின் விளிம்பின் மேல் நிற்பது போன்று தொங்கி கொண்டிருக்கிறது.
காரணம், எடப்பாடி தரப்பில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்,எல்.ஏக்களும், ஒ.பி.எஸ் தரப்பினர் கொடுக்கும் டார்ச்சரும் தான்.
எடப்பாடிக்கு எதிராக அவர்கள் தரப்பு எம்.எல்.ஏக்களே தனி ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
தன் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்பதில் எடப்பாடி கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். ஒ.பி.எஸ் தனி அணியாக சென்ற போது அவருக்கு மக்களிடையே பெரிதும் வரவேற்பு கிடைத்தது.
இதையறிந்த எடப்பாடி எப்படியாவது ஒ.பி.எஸ்ஸை வளைத்து போட்டுவிட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு தனது அமைச்சர்கள் மூலம் தூது விட்டார்.
ஆனால் அமைச்சர்கள் நேரடியாக ஒ.பி.எஸ்ஸிடம் செல்லாமல் மீடியாக்களை புறாக்களாக கையில் எடுத்தனர்.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்காக குழு அமைக்கப்பட்டு வாயிற்கதவுகளை திறக்கும் அளவுக்கு சென்றது.
இதையடுத்து இருதரப்பிலும் உள்ள சகுனிகள் தங்கள் வாய்க்கு வந்ததை காற்றில் பறக்கவிட பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை விழ ஆரம்பித்தது.
இருந்தும் ஒ.பி.எஸ் தரப்பு முன் வைத்த கோரிக்கையை எடப்பாடி அப்படியும் இப்படியுமாக கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றினார்.
சசிகலா சிறைக்கு சென்ற போது ஒரு தடவை கூட சிறைக்கு சென்று பார்க்காமல் தவிர்த்து வந்தார். மேலும் சசிகலா நியமித்த டிடிவி தினகரனையும் அமைச்சர்களுடன் பேசி கட்சியில் இருந்து ஓரங்கட்டினார்.
ஆனால் ஒ.பி.எஸ் நிலா சோறு ஊட்டுவது போல் எடப்பாடியை ஏமாற்றியே வந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி விழா ஒன்றில் வார்த்தையை விட்டு விட்டார். ஒ.பி.எஸ் வந்தாலும் பரவா இல்லை. வராவிட்டாலும் பரவா இல்லை என்று.
இதையடுத்து ஆர்.கே.நகரில் பேசிய ஒ.பி.எஸ் எடப்பாடி அரசை டீக்கடை கிளாசை கழுவி கழுவி ஊற்றுவது போல் ஊற்றினார். பின்னர், தலைகளே திட்டி தீர்க்கும்போது வால்களுக்கு சொல்லவா வேண்டும்.
இருதரப்பினரும் அவர்கள் பங்கிற்கு மைக் கிடைக்கும் போதேல்லாம் புகார் வண்ணம் தான்.
அதேபோல் நேற்று திண்டுக்கலில் நடந்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா கூட்டத்திலும் ஒ.பி.எஸ் எடப்பாடி அரசுக்கு சவால் விடுக்கும் அளவிலே பேசி வந்தார். தேர்தல் வந்தால் எடப்பாடி அரசு தரப்பில் யார் நின்றாலும் டெபாசிட் இழப்பார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், ராஜபாளையத்தில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் கலக்கத்தில் உள்ளதாகவும், இரு அணிகள் இடையேயான பேச்சு தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒ.பி.எஸ்ஸின் இத்தகைய செயல்பாடுகள் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போன்று இருக்கிறது.