
தகுதி நீக்கம் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிரான தீர்ப்பு வரும் என்றும் பெரும்பானமையை நிரூபிக்க முடியாமல் இந்த ஆட்சி கவிழும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் சசிகலா குடும்பத்தின் கையே ஓங்கி இருந்தது. இதனால் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த ஒபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார்.
இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அவரை தொடர்ந்து அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் சிறைக்கு சென்றார்.
ஆனால் முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி மட்டும் அமைச்சர்களுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழகத்தில் நிலைத்து வருகிறார்.
சசிகலா குடும்பத்திற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் அவர்களை ஒதுக்கி வைக்க முடிவு எடுத்தனர்.
டிடிவி தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்பும் கட்சிக்கும் இலை சின்னத்திற்கும் தேர்தல் ஆணையத்தில் போட்டி போட்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து டிடிவி தரப்பை எப்படியாவது விரட்டியடிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு மும்முரமாக வேலை பார்த்து வருகிறது.
இதனிடையே சசிகலா குடும்பத்தின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு களம் இறங்கியது.
இதைதொடர்ந்து வரி ஏய்ப்பு வழக்கில் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 2 ஆண்டுகள் சிறை தண்டனை தொடர்பாக வழக்கை நடராஜன் சட்டப்படி எதிர்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவை அழித்து வளர வேண்டும் என்று நினைப்பவர்களை விடமாட்டோம் என்றும் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதிமுகவை காக்க முழு முயற்சி செய்து வெற்றிபெறுவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தற்போது ஆட்சி நடைபெறுகிறதா ? என கேள்வி எழுப்பிய டிடிவி தகுதி நீக்கம் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிரான தீர்ப்பு வரும் என்றும் பெரும்பானமையை நிரூபிக்க முடியாமல் இந்த ஆட்சி கவிழும் என்றும் குறிப்பிட்டார்.
துரோகிகள் அணிகள் இருக்கும் எங்களது ஸ்லீப்பர் செல்கள் எப்போது வேண்டுமோ அப்போது வெளியே வருவார்கள் என்றும் தெரிவித்தார்.