முன்னாள் முதலமைச்சர் ஜெயலலதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்தினர் அனைவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஜெ.தீபாவின் கணவர் மாதவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்ற ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவருடைய மரணம் நிகழ்ந்தது. ஆனால் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டன.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை கலசமகாலில் ஆறுமுகசாமி தனது விசாரணையைத் துவங்கி நடத்திவருகிறார்.
விசாரணைக்கமிஷன் முன்பு ஆஜராகுமாறு முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாசகிருஷ்ணன் உள்ளிட்ட சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நேரில் ஆஜராகுமாறு 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
மதுரை டாக்டர் சரவணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் இன்று நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், நீதிபதியிடம் தனக்கு தெரிந்த உண்மைகளை கூறியதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சசிகலா, இளவரசிஇ டி.டி.வி.தினகரன், விவேக், திவாகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
முக்கியமாக இவர்கள் அனைவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறினார்.