
அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சந்திப்பாக , ஆளுநரை சந்தித்தேன் எனவும், தோப்பூர் முப்பெரும் விழா நடத்தப்பட்டது எங்களுக்கு சற்று நெருடலாகத்தான் உள்ளது எனவும் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
EPS-OPS அணிகள் ஒன்றாக இணைந்து,தினகரன் அணிக்கு எதிராக மாறி தற்போது இரட்டை இலை சின்னத்தையும் பெற்று அதிமுக என்ற கட்சிக்கு சொந்தம் கொண்டாடும் உரிமையை பெற்றனர்.
முதல்வருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும் துணை முதல்வருக்கு கொடுக்கப்படுவதில்லை என ஒபிஎஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.
மதுரையில் இன்று நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு,துணை முதல்வர் பன்னீர் செல்வதை அழைக்கவும் இல்லை. அழைப்பிதழில் பன்னீர் செல்வத்தின் பெயரும் இடம் பெறவில்லை. மேலும் திறக்கப்பட்ட கல்வெட்டில் துணை முதல்வர் பெயரும் இல்லை.
இதன் காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையில், கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அதிமுக எம்.பி. மைத்ரேயன் திடீரென சந்தித்து பேசினார்.
இந்த நிகழ்வு தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த தர்ம யுத்தம் தொடங்கிவிடுமோ என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சந்திப்பாக , ஆளுநரை சந்தித்தேன் எனவும், தோப்பூர் முப்பெரும் விழா நடத்தப்பட்டது எங்களுக்கு சற்று நெருடலாகத்தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் ஒற்றுமையாக இருந்து கட்சியை பாதுகாக்க வேண்டும் எனவும்பழைய விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த காலம் கசந்த காலமாக இருந்தாலும் வரும் காலம் வசந்த காலமாக வேண்டும் எனவும் சின்னத்தை மீட்டெடுத்ததில் எங்களுக்கும் பங்கு உண்டு எனவும் தெரிவித்தார்.