இறந்து 22 நாட்களாக உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தங்கையின் சடலத்தை வீட்டிலேயே வைத்திருந்த அக்கா கைது.

By Ezhilarasan BabuFirst Published Jan 2, 2021, 2:31 PM IST
Highlights

திண்டுக்கல்லில் பெண் காவலர் இறந்து 22 நாட்களாக உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் வீட்டிலேயே வைத்திருந்த உடன் பிறந்த அக்கா மற்றும் பாஸ்டர் ஆகியோர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல்லில் பெண் காவலர் இறந்து 22 நாட்களாக உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் வீட்டிலேயே வைத்திருந்த உடன் பிறந்த அக்கா மற்றும் பாஸ்டர் ஆகியோர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனியில் வசித்து வருபவர் அன்னை இந்திரா.  இவர் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பெண் காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது கணவர் பால்ராஜ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அன்னை இந்திராவிற்கு பல வருடங்களாக  உடல்நிலை பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் இவர் அடிக்கடி விடுமுறை எடுப்பார். இவருடன் இவரது அக்கா வாசுகி வயது 47 மற்றும் குடும்ப நண்பர் பாஸ்டர் சுதர்சனம் வயது 45 ஆகியோர் உடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16.10. 2020 முதல் அன்னை இந்திரா மெடிக்கல் விடுமுறையில் சென்றுள்ளார். 

இவர் 25.12.2020 மீண்டும் பணிக்கு வர வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் 31.12. 2020 வரை இவர் பணிக்கு வரவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் இரண்டு பெண் காவலர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டின் உள் அறை கதவு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் காவலர்கள் உடனடியாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்த பொழுது இந்திராவின் உடல்  துணியால் மூடப்பட்டு இருந்தது. அதனை திறந்து பார்த்த பொழுது உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. இதனைத்தொடர்ந்து அன்னை இந்திராவின் அக்கா வாசுகி மற்றும் அவரது குடும்ப நண்பர் சுதர்சன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்த போது அன்னை இந்திரா கடந்த டிசம்பர் 7ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் அதற்காக தினமும் நாங்கள் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். 

இதனையடுத்து வாசுகி மற்றும் சுதர்சனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அன்னை இந்திராவின் உடல் அழுகி விட்டதால் அவரது வீட்டில் வைத்தே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். 176 வது பிரிவு பொது ஊழியருக்கு தெரிவிக்க வேண்டிய தகவலை தெரிவிக்காமல்  மறைத்தது. பிரிவு 304(A) (கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தியது ) சிகிச்சை அளித்தால் உயிர் பிழைத்து விடுவார் என்று தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் வைத்திருந்தது. 406 நம்பிக்கை துரோகம் செய்தல், 420 ஏமாற்றி பொருளைப் பறிப்பது ஆக 4 பிரிவின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

click me!