கட்சி ஆரம்பித்து என்னால் அரசியலுக்கு வர முடியவில்லை.. இந்த வலி எனக்குமட்டும்தான் தெரியும்.. ரஜினி உருக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2020, 12:36 PM IST
Highlights

நான் கட்சி ஆரம்பித்த அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்... ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முக கவசம் அணிவித்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் நான்கு பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் எனக்கு ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத்தாழ்வு இருந்தது. மருத்துவரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. அது என்னுடைய மாற்றுச் சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. 

என் உடல் நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதிமாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்தி வைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம், இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல்நிலை, இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாக தான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நாம் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து, கூட்டங்களை கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று, ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது, இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. 

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்,  மருந்துகளை சாப்பிடும் நான் இந்த குறைந்த காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி  என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல  சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். என் உயிர் போனாலும் பரவாயில்லை நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்த அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

click me!