கல்வி,சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருந்த தமிழகம்.! சாராயம் பதுக்குவதில் முதலிடத்தை பிடித்துள்ளது-ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published May 18, 2022, 1:09 PM IST
Highlights

புகழ் பெற்ற மெரினா கடற்கரையை போதைப் பொருட்களின் மையமாக ஆக்கியுள்ள தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் லஞ்சம்- ஊழல்

சென்னை மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் புதைத்து கள்ளசாரயம் விற்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுள்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் முதன்மை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, ஒரேயாண்டில் சாராய பாட்டில்களை பதுக்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று சொல்லும் அளவுக்கு சாராய பாட்டில்கள் மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளிப்பதோடு மட்டுமல்லாமல், 'திராவிட மாடல் ஆட்சியை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது; விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது; கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுக்கு அடங்காமல் இருக்கின்றது; தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகளின் ஆதிக்கம் பெருகிக் கொண்டிருக்கிறது; அரசாங்கத்தில் அரசியல் வாதிகளின் தலையீடு இருக்கிறது; அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் தாக்கப்படுகிறார்கள்; அன்றாடம் ஆங்காங்கே கொலை, கொள்ளைகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன; குடும்ப ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது; பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது என்றால் அந்த நாட்டில் பதுக்கல், கடத்தல், வசூல், லஞ்ச லாவண்யம், ஊழல், தன்னலம் ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்பதுதான் பொருள். இந்த நிலைமை தான் தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

 

மெரினா கடற்கரையில் இந்த நிலையா?

இரண்டு மாதங்களுக்கு முன், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுவதாகவும், சென்னை போதைப் பொருளின் விற்பனை சந்தையாக மாறிவிட்டதாகவும், காவல் துறையினரே அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக பத்திகைகளில் செய்திகள் வெளி வந்தன. இதனைச் சுட்டிக்காட்டி நானும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தேன். இதனை நிரூபிக்கும் வகையிலான நிகழ்வுகள் இன்று நிகழ்ந்துள்ளன. சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் சாராய பாட்டில்கள் உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, இரவு நேரத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல்கள் வந்த நிலையில், இன்று காவல் துறையினர் நடத்திய விசாரணையில் போதைப் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டது நிருபிக்கப்பட்டு உள்ளதாகவும், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தோண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் பொழுதுபோக்கும் இடமாக விளங்கும் மெரினா கடற்கரையில், சுற்றுலாப் பயணிகள் வருகை புரியும் மெரினா கடற்கரையில், இதுபோன்ற பதுக்கல் நடைபெறுகிறது என்றால், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் என்ன நிலவுகிறதோ என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலேயே இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருப்பது தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. முந்தைய தி.மு.க. ஆட்சியில் இருந்ததைப் போன்று கூடுதல் அதிகார மையங்கள் செயல்படுகின்றனவோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மணலுக்கு அடியில் சாராயம்

- இதன்மூலம், "எல்லா வசதிகளும் நிறைந்து இருந்தாலும், அரசர் சரியில்லாத நாடு வாழத் தகுதியற்றது" என்ற திருவள்ளுவரின் வரிகள்தான் மக்கள் நினைவிற்கு வருகின்றன. தமிழ்நாட்டை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ள தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மெரினா கடற்கரையில் மணலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சாராய பாட்டில்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமானவையா அல்லது கள்ளச் சாராயம் காய்ச்சி பாட்டில்களில் நிரப்பி தனியாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறதா என்பதையும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் மடைமாற்றி விடப்படுகிறதா என்பதையும் காவல் துறையினர் தீர விசாரித்து, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் ஆகும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் எங்கெங்கு நடைபெறுகின்றன என்பதை கண்டறிந்து, இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!