
கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பே, சமூக ஊடங்கங்களில் வெளியானதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல்
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தனது 2-வது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தது.பட்ஜெட்டை நிதிஅமைச்சர் தாமஸ் இசாக் தாக்கல் செய்தார்.
மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, சமூக நல திட்டங்கள், பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம், மக்களின் சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட் இருந்தது.
குற்றச்சாட்டு
ஏறக்குறைய 3 மணிநேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் உரை இறுதிக்கட்டத்தை எட்டியவுடன், எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ்சென்னிதலா எழுந்து, “பட்ஜெட் சட்டசபையில் தாக்கலும் முன்பே சமூக ஊடகங்களில் வெளியாகிவிட்டது'' எனக் குற்றம்சாட்டினார்.
உடனே எழுந்த முதல்வர் பினராயி விஜயன், “ பட்ஜெட் விவரங்கள் ஏதும் கசியவில்லை. அதேசமயம், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யப்படும்'' என்றார்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன், “ இது மிகவும் தீவிரமான விசயம். சபை முடிந்தபின் இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
மறுப்பு
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்த நிதி அமைச்சர் இசாக், “ சமூக ஊடகங்களில் என்ன வந்துள்ளது என எனக்கு தெரியாது. எனக்கு தெரியாதவிசயத்தில் கருத்துக் கூற முடியாது'' என்றார்.
வெளிநடப்பு
இதை மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா “ பட்ஜெட் நகல் சட்டசபையில் தாக்கல் ஆகும் முன்பே சமூக ஊடகங்களில் வெளியாகி அதன் புனிதத்தை இழந்துவிட்டது. இது நிதி அமைச்சரின் அலுவலகத்தில் இருந்துதான் வெளியாகி இருக்கிறதாக கருதுகிறோம். ஏனென்றால், அவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஈடுபாடக இருப்பவர்'' எனக் குற்றம்சாட்டி பேசினார்.
அதன்பின், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ஓ. ராஜகோபால் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.