
தென் இந்தியாவில் கர்நாடகத்துக்குப் பிறகு புதுச்சேரியில் பாஜக, ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா என பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சி வரத்தான் போகிறது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிரணி கூட்டம்
புதுச்சேரியில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரியில் பாஜக தேசிய மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் இரு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து மாநில பாஜக தலைவிகள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் மகளிருக்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற திட்டங்கள் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்தும் பேச உள்ளோம். தென் இந்தியாவில் கர்நாடகத்துக்குப் பிறகு புதுச்சேரியில் பாஜக, ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகம், ஆந்திரா, தெலங்கானா என பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சி வரத்தான் போகிறது.
திமுகவுக்கு கோரிக்கை
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் பாஜக நுழைந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை இனி அதிகரிக்குமே தவிர குறையாது. ஒட்டுமொத்த தமிழகத்தை வளர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் யோசிக்கிறார் என்று நிதி அமைச்சர் கூறினார். அனைத்து மாநிலங்களும் வளர்ந்தால்தான் இந்தியா வளரும். அதற்காகத்தான் பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களுக்குமான வளர்ச்சியை யோசிக்கிறார். தமிழக முதல்வர் தமிழகத்தின் பெருமைகளை வெளிநாடுகளில் எடுத்துச் செல்வது தமிழகத்துக்குப் பெருமைதான். ஒட்டுமொத்த இந்தியா முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக செயல்படவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
இதுதான் வேதனை
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேசிய ஒன்றுமைக்கு எதிராக பேசுவதையும் செயல்படுவதையும் திமுகவினர் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் இந்த எண்ண ஓட்டம்தான் எங்களுக்கு வேதனையாக உள்ளது.” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.