
தமிழகத்தில் அடுத்து அமையப்போவது பாரதிய ஜனதாவின் ஆட்சிதான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சீன பட்டாசுகள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கூறினார். நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, சீன பட்டாசுக்கு தடை விதித்தது என்றும், தற்போது நாட்டில் சீன பட்டாசு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதாகவும் அவர் தெரவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்தியாவில் 60 சதவீத பகுதியில் பாஜக ஆட்சி செய்து வருவதாக கூறினார். தென் மாநிலங்களான கேரளம், தமிழகம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கான காலம் கனிந்து வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி மக்கள் வாக்களித்து ஓய்ந்து விட்டனர்.
அதிமுக என்பது முடிந்துபோன கட்சி என்றும் திமுகவின் செயல் தலைவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மோசமான ஆட்சிபோல் வேறெங்கும் இல்லை என்றும் தமிழகத்தில் அடுத்து அமையப்போவது பாஜக ஆட்சிதான் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.