
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி எனும் லட்சியத்தை சிதைக்கும் தேசிய நலனுக்கு எதிரான அக்னிபத் என்ற திட்டத்தை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இளைஞர்கள் முதல் ராணுவ அதிகாரிகள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
அக்னிபத் என்னும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், ராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆல் சேர்ப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மாதம் இருமுறை வெளிவரும் பிரபல பிரண்ட்லைன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி பக்ஷி இத்திட்டத்தை கேள்விப்பட்டு திடுக்கிட்டுப் போனேன், for God's sake please don't do it என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இன்னொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் கத்யன் 4 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் ராணுவ வீரர் தன் உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு போரில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது என்று கவலை தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் தவிர நாட்டின் பாதுகாப்பு பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், ராணுவ பணி பகுதி நேர பணி அல்ல என்றும் இதுபோன்ற தேர்வு ராணுவத்தில் கட்டுப்பாட்டை கெடுக்கும் என்று கூறி இந்த தேர்வு திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவ பணி எனும் லட்சியத்தை சிதைக்கும் இந்த அக்னிபத் என்ற தேசிய நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.