எடப்பாடி-ஓ.பி.எஸுக்கு போன கடிதம்... முட்டி மோதும் மும்மூர்த்திகள்..!

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2021, 2:17 PM IST
Highlights

அதேவேளை அ.ம.மு.க.,வில் இருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் கவுன்சிலர் சரவணனும் சீட் கேட்டு வருகிறார். 


'’தென்சென்னை தெற்கு -கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் தலைமைக்கும், கழகத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தலைமை கழகம், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கும் எந்த ஒரு நிகழ்வையும் , தகவலையும் பகுதி கழக செயலாளரிடம் தெரிவிப்பதில்லை. இது மட்டும் இல்லாமல் அம்மா அவர்களின் நினைவிடம் திறக்கும் நாளில் தலைமை கழகம் மாவட்ட செயலாளரிடம் பத்து லட்சம் ரூபாய் வழங்கி ஆட்கள் அழைத்து வர சொன்ன நிலையில் 5000 நபர்களை அழைத்து வர வேண்டிய இவரோ 12 வட்டத்திலும்  மொத்தம் 1040 நபர்களை அழைத்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோல் எடப்பாடி, ஓ.பிஎஸ் இருவரும் இணைந்து ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தேர்தல் பரப்புரையின்போதும் இதே நிலைதான் தலைமையில் வாங்கிய பத்து லட்சம் ரூபாயில்  மூன்று லட்சம் செலவு செய்து மிதமுள்ள ஏழு லட்சத்தை அபேஸ் செய்தார் எங்கள் மாவட்டச் செயலாளர்.

எனவே இது போன்ற நிலை மேலும் நீடிக்காமல் தலைமை வழங்கிய பணத்தை நபர் ஒருவருக்கு 200 வீதம் வழங்கி இருந்தார். அதுவே நமக்கு வாக்கு வங்கியாக மாறி இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே மிகழும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். கழக ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் எடப்படி-ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் தயவு கூர்ந்து கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தி மைலாப்பூர்-வேளச்சேரி பகுதிகளில் ஏற்பட்டுள்ள நம் கட்சி பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி கேட்டுக் கொள்கிறேன்’’என வேளச்சேரி பகுதி கழக செயலாளர் மூர்த்தி சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் மீது குற்றம்சாட்டியுள்ளார். 

வேளச்சேரி தொகுதியில் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.கே.அசோக். 2016ம் ஆண்டு முனுசாமிக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், திமுகவை சேர்ந்த வாகை சந்திரசேகர் வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய மாவட்ட செயலாளருமான அசோக். ஆனால் அவர் மீது கட்சிக்குள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு சாம்பிள்தான் வேளச்சேரி பகுதி கழகச் செயலாளர் மூர்த்தி அனுப்பிய அந்தக் குற்றச்சாட்டு கடிதம். அதே போல் மூர்த்திக்கும், அசோக்குக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. காரணம் மூர்த்தியும் இந்த முறை தனக்கு எம்.எல்.ஏ சீட் வேண்டும் எனக் கேட்டு வருகிறார்.

அதேவேளை அ.ம.மு.க.,வில் இருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் கவுன்சிலர் சரவணனும் சீட் கேட்டு வருகிறார். அசோக்- மூர்த்தி இருவருக்கும் இடையே நிகழ்ந்து வரும் யுத்தத்தால் வேளச்சேரி சரவணனுக்கு இந்த முறை சீட் கிடைக்க அதிக வாய்ப்புள்ள்தாக கூறப்படுகிறது.

click me!