நேரு உருவாக்கிய இந்தியா இங்கே... மோடி உருவாக்கிய இந்தியா எங்கே.? பாஜகவினருக்கு ஜோதிமணி கேள்வி!

By Asianet TamilFirst Published May 27, 2021, 10:04 PM IST
Highlights

இந்தியாவில் மோடி அழித்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் உருவாக்கிய மாபெரும் தலைவர் ஜவஹர்லால் நேரு என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
 

மறைந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நேருவின் நினைவு நாளையொட்டி கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தொடர்ந்து நேரு பற்றிய தகவல்களையும் பாஜகவை விமர்சித்தும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். முதல் பதிவில், “அடிமை இந்தியாவில் போராடிக்கொண்டே சுதந்திர இந்தியாவைப் பற்றி கனவுகண்டவர் நேரு. அந்த கனவுதான் பின்பு இந்தியாவை ஒரு மாபெரும் நவீன, ஜனநாயக நாடாக மாற்றியது. உலக அரங்கில் இந்தியாவிற்கென்று ஒரு அந்தஸ்தை உருவாக்கியது.
ஆங்கில ஆட்சியில் முன்னூறு ஆண்டுகளாக உருக்குலைந்து கிடந்த, பல்வேறு சாதிகள்,மதங்கள்,இனங்கள் என்று பிரிந்து கிடந்த தேசத்தை தனது சகாக்களின் துணையோடு வெறும் பதினேழு ஆண்டுகளில் கட்டியெழுப்பிய மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர். கல்வி, கலை, அறிவியல், விஞ்ஞானம், நீர் மேலாண்மை, விவசாயம் என்று அவர் கனவுகாணாத துறைகளே இல்லை. அத்தனையையும் செயல்படுத்திக் காட்டியவர் என்பதுதால்தான் அவர் ஒரு அழிக்க முடியாத ஆளுமை. அவர் கனவு கண்டு உருவாக்கிய இந்தியாவைக் கட்டிக்  காப்பதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி” என்று தெரிவித்திருந்தார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் பதிவில், “நேரு யாரென்று தெரியாத பிஜேபியினருக்கு எளிதாக புரியும்படி சொல்கிறேன். இந்தியாவில் மோடி அழித்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் உருவாக்கிய மாபெரும் தலைவர். நேரு உருவாக்கிய இந்தியாவின் ஒரு பகுதி இங்கே.மோடி உருவாக்கிய இந்தியா எங்கே?” என்று 1952 முதல் நேரு இருந்தவரை அவருடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய டைம்லைனையும் ஜோதிமணி இணைத்துள்ளார்.

click me!