பொதுப்பணித் துறை அமைச்சரா மாறிமாறி இருந்து வரலாறு தெரியல.. ஓபிஎஸ்-இபிஎஸ்ஸைத் தெறிக்கவிட்ட எ.வ.வேலு.!

By Asianet TamilFirst Published Aug 1, 2021, 10:27 PM IST
Highlights

ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் மாறி மாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள். அப்படியிருந்தும் பென்னிக்குயிக் வரலாறும் தெரியவில்லை; அவரது நினைவிடமும் தெரியவில்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம்" என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிக்கை என்ற 'அறியாமைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தென் தமிழ்நாடு மக்களின் கனவை நனவாக்க - அங்குள்ள இளைஞர் சமுதாயம் ஏற்றம் பெற மதுரையில் கலைஞர் பெயரில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தது, இருவருக்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பது அவர்களது பொருளற்ற அறிக்கையில் தெளிவாகிறது. மதுரைக்கு ஒரு நல்ல திட்டம் வருவதை அனுமதிப்பதா? என்று வீம்புக்காக மல்லுக்கு நிற்கிறார்கள் ! இரட்டை தலைமை உள்ள அ.தி.மு.கவால் ஒரு நல்ல திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், தனக்கு வாக்களித்துள்ள மக்கள் பயன் பெறும் திட்டம் ஓ. பன்னீர்செல்வத்துக்கே பிடிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
"கலைஞர் நூலகத்திற்கு " 7 இடங்களை தேர்வு செய்து, அவற்றுள் இறுதியாக மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டது. இந்தக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பென்னிக்குயிக் வாழ்ந்ததாக திடீரென ஒரு புரளியை கிளப்பி விட்டு - பொய்ச் செய்தியைப் பரப்பி - இப்போது அறிக்கை வடிவில் வெளியிட்டு மதுரைக்கு வரும் நூலகத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று அதிமுக வழக்கம் போல் தங்களது மலிவு அரசியலை நடத்துவது அப்பட்டமாக வெளிப்படுகிறது. இது வெட்கக்கேடானது! அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆக்கபூர்வமான திட்டத்தைக்கூட செய்யத் தெரியாது - சிந்திக்கவும் தெரியாது. பெருந்திட்டங்களை நிறைவேற்றும் அருகதையும் அறவே கிடையாது.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியும் - முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் "கூட்டாக" ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் இப்படியொரு நூலகம் கட்டுவது குறித்து ஒரு நொடியாவது சிந்தித்தது உண்டா ? அதுசரி! அவர்களுக்கு வேறு வேலைகள்" இருந்திருக்கிறது என்பதை நாங்கள் கோப்புகளை பார்க்கும்போது எங்களுக்கு ஆதாரபூர்வமாகப் புரிகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களுள் ஒன்றான - திமுக ஆட்சியில் கலைஞர் சென்னை கோட்டூர்புரத்தில் உருவாக்கிய அண்ணா பெயரிலான நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்தார்கள். கலைஞர் நாள்தோறும் - உன்னிப்பாக கண்காணித்து - தொலைநோக்குப் பார்வையுடன் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை காழ்ப்புணர்ச்சியோடு மாற்றினார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைத் திட்டங்களை சிதைத்தவர்கள், இப்போது கலைஞர் நூலகம்' அமைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் - வயிற்றெரிச்சலுடன் கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்து, அ.தி.மு.க. எப்போதுமே தமிழ்நாட்டின் அழிவு சக்திதான்' என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உணர்த்தியுள்ளார்கள்.
கலைஞர் நூலகத்திற்கு' தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்து வதந்தி கிளம்பிய போதே "15.01.1841- இல் பிறந்த கர்னல் பென்னிகுயிக் 09.03.1911- இல் இயற்கை எய்தியுள்ளார். பொதுப்பணித்துறை ஆவணங்களைப் பரிசீலனை செய்ததில் இந்தக் கட்டடமானது 1912- இல் பூமி பூஜை செய்யப்பட்டு 1913- இல் கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டிட பதிவேடு எண். 159/1- ல் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றும், "கர்னல் ஜான் பென்னிகுயிக் மறைந்த காலத்திற்குப் பின் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இக்கட்டடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை" எனவும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெளிவாகத் தெரிவித்து - அது பத்திரிகைக் குறிப்பாகவும் வெளியிடப்பட்டு அனைத்துப் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் படிக்க முடிந்த அறிவாளிகளால், நாள்தோறும் வெளியாகும் செய்தித்தாள்களைக் கூட படிக்க முடியவில்லை என்பது வேதனையை தருகிறது! "மடியில் கனமிருப்பதால் வழியில் பயம்" என்ற பீதியில் உலவிக் கொண்டிருக்கும் இருவரும் ஏதாவது ஒன்றை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள முனைகிறார்கள். இருவரும் மாறி மாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள். அப்படியிருந்தும் பென்னிக்குயிக் அவர்களின் வரலாறும் தெரியவில்லை; அவரது நினைவிடமும் தெரியவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை 10 ஆண்டு காலம் சீரழித்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் - கடந்த 4 ஆண்டுகளில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பக்கமே தலைவைத்தும் படுக்காத இவர்கள் - இன்றைக்கு கலைஞர் நூலகத்தை எதிர்ப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் பச்சைத் துரோகம். அது அவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம்; ஆனால் தென் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்!
இளைஞர்கள் கல்வியறிவு பெறுவதும் பிடிக்கவில்லை; தென் தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறும் இந்த நூலகம் - சங்கத் தமிழின் தலைநகராம் மதுரையில் அமைவதையும் இவர்கள் விரும்பவில்லை. எனவே கங்கணம் கட்டிக் கொண்டு விஷத்தைக் கக்குகிறார்கள். என்ன செய்வது? விஷயம் இல்லாதவர்கள் ! அன்னைத் தமிழ் இவர்களுக்கு ஆட்சியிலிருந்த போதும் கசந்தது; இப்போதும் கசக்கிறது. ஆட்சியில் இல்லாத போதும் கூட்டணி தோஷத்தால் கலைஞரின் பெயரைக் கேட்டாலே எட்டிக்காயாக கசக்கிறது. கர்னல் பென்னிகுயிக்கிற்கு சிலை வைத்து அழகு பார்த்தவர் கலைஞர். அதை புதுபொலிவுடன் மாற்றியது திமுக ஆட்சி. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உழவர்களின் உரிமைகளை நிலைநாட்டி - இன்றைக்கு தென் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்கள் பயனுறும் நிலையை உருவாக்கியதும் திமுக ஆட்சிதான் என்பதை ஓ. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் உணர வேண்டும்.
ஆகவே கதை அளந்து "கலைஞர் நூலகத்தை" தடுத்து விடலாம் என்று அவர்கள் கனவிலும் நினைக்க வேண்டாம். மதுரை மாநகரில் கலைஞர் பெயரிலான நூலகம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் கம்பீரமாக எழும் - இளைஞர்கள் எழுச்சி பெறுவர் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று அறிக்கையில் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

click me!