சென்னை மட்டும் அல்ல அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாகும் ஊரடங்கு..! தமிழக அரசின் அடுத்த பிளான்..!

By Selva KathirFirst Published Jun 19, 2020, 9:57 AM IST
Highlights

சென்னையில் முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கொரோனவை கட்டுப்படுத்த கண்டிப்பான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கொரோனவை கட்டுப்படுத்த கண்டிப்பான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த முறை ஊரடங்கு அமலான போது முதல் இரண்டு கட்டங்களில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஊதாரிகள் சிலர் மட்டுமே ஊரைச்சுற்றி கொரோனா பரவலுக்கு காரணமாகினர். இதனால் அவர்களை போலீசார் தங்கள் ஸ்டைலில் கவனித்தனர். ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களிடம் ஊரடங்கு குறித்த எந்த அச்சமும் இல்லை. கொரோனவை பற்றியும் கவலைப்படாமல் வழக்கமான நாட்களை போல் மக்கள் நடமாட ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் சென்னையில் கொரோனா வேகமாக பரவிய நிலையில் தற்போது சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. அதிலும் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புபவர்களால் அங்கு கொரோனா அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனால் அடுத்த 14 நாட்களுக்குள் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று தமிழக அரசு நம்புகிறது. அதே சமயம் சென்னையை கவனித்துவிட்டு மற்ற மாவட்டங்களை அலட்சியம் செய்தால் அங்கு கொரோனா பரவலாகிவிடும் என்றும் நினைக்கிறது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 33 மாவட்டங்களுக்கு ஐஏஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள 33 அதிகாரிகளும் தங்கள் துறையில் சிறப்பான சாதனைகளை செய்தவர்கள். மேலும் தங்கள் பணிகளுக்காக பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றவர்கள். மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு முதல் துறை செயலாளர் வரை உயர் பொறுப்புகளை வகித்தவர்கள். ராஜேஷ் லக்கானி, ககன் தீப் சிங் பேடி, பீலா ராஜேஷ், உதயச் சந்திரன் என ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவருமே தனிச்சிறப்பு கொண்டவர்கள்.

வழக்கமாக சிறப்பு அதிகாரிகளாக இரண்டாம் நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தான் நியமிக்கப்படுவர். ஆனால் இந்த முறை ஒவ்வொரு மாவட்டத்திற்குமே முதல் நிலை ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பேரிடர்களை எதிர்கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக கொரோனாவை மற்ற மாவட்டங்களிலும் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் கொரோனவை கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள், கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதுமே இன்று முதல் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தளர்வுகள் அளிக்கபட்ட துறைகள் தவிர மற்றவைகள் இயங்க அனுமதிக்கப்படாது என்று கூறுகிறார்கள். மேலும் சாலைகளில் நடமாடுவோறும் இனி அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய நிலை வரும். எனவே மக்களும் நோயின் தீவிரத்தை உணர்ந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை வென்று இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

click me!