முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான ஊழல் வழக்கு... திடீரென வாபஸ் பெற்ற திமுக.. திரைமறைவு டீலிங்..?

By Selva KathirFirst Published Jun 19, 2020, 9:50 AM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையை கவனித்து வரும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான ஊழல் வழக்குகளை திமுக திடீரென வாபஸ் பெற்று உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையை கவனித்து வரும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான ஊழல் வழக்குகளை திமுக திடீரென வாபஸ் பெற்று உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் சுமார் 462 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகளை புதிதாக அமைக்கவும், ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டன. இதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டது. 1165 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரை பெற பலமுன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் 1165 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரின் கால அளவு ஐந்து ஆண்டுகளாகும். 462 கிலோ மீட்டர் தொலைவிலான சாலையை 5 ஆண்டுகள் அமைக்க வேண்டும் என்றால் அதற்கான செலவு வருடத்திற்கு 100 கோடி ரூபாய் என்று கூறுகிறது திமுக.

வருடத்திற்கு 100 கோடி ரூபாய் என்றால் தஞ்சை மாவட்ட சாலை அமைக்கும் பணிகளுக்கு மொத்தமே 500 கோடி ரூபாய் தான் செலவு என்று தெரிவித்த திமுக இதில் 1165 கோடி ரூபாய் டெண்டர் என்று ஊழல் நடைபெற்றுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதிலும் நெடுஞ்சாலைத்துறையை தனத வசம் வைத்து உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டு இருந்தார்.

மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மற்ற பெரிய நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தாரர்கள் உரிய ஆவணங்களுடன் டெண்டரில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் இதனை பயன்படுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்கள் மற்றும் வேண்டியவர்களுக்கு இந்த டெண்டரை கொடுத்துள்ளார் என்றும் திமுக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஆஜரான தமிழக அரசின் வழக்கறிஞர், ஒன்றாம் தேதி டெண்டர் விட திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் டெண்டரில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம், டெண்டரில் யாருமே கலந்து கொள்ளவில்லை, யாருக்கும் டெண்டரே ஒதுக்கவில்லை. அப்படி இருக்கையில் இதில் எப்படி முறைகேடு நடைபெற்று இருக்கும் என்று கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் தான் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தஞ்சை மாவட்ட சாலை டெண்டர் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறினார். இதனை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

இதே போன்று தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இன்டர்நெட் கனெக்சன் வழங்க பைபர் ஆப்டிக் கேபிள் பதிக்கும் பணிக்கு கடந்த டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. 1950 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரை குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க தகுதியான நிறுவனங்களை தமிழக அரசு நிராகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் உலகில் கொரோனா பரவல் ஆரம்பமானது.

அப்போது நோய்த் தடுப்பில் ஆர்வம் காட்டாமல் குறிப்பிட்ட 2 நிறுவனங்களுக்கு ஆதரவாக விதிகளை மாற்றி டெண்டர் கோரியதில் முறைகேடு நடைபெற்றதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் உதயகுமார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் ஆர்.எஸ் பாரதி கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டர் இ டெண்டர் என்றும் இதில் ஒளிவு மறைவு இல்லை என்றும்தற்போதும கூட டெண்டரில் யாரும் கலந்து கொள்ள முடியும் என்று தமிழக அரசுவிளக்கம் அளித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக நேற்று ஆர்.எஸ்.பாரதி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பு பிரிவு நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சில மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கூட கிடைக்காத அளவிற்கு போலீசார் காய் நகர்த்தினர்.

இந்த சூழலில் தான் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தஞ்சை மாவட்ட சாலை அமைக்கும் டெண்டர் மற்றும் பாரத் நெட் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு என உயர்நீதிமன்றத்தை நாடினார். தற்போது திமுக நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை தமிழக அரசும், போலீசாரும் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இரண்டு முக்கியமான வழக்குகளையும் திமுக வாபஸ் பெற்றதாகவும் இது ஒரு ரகசிய டீலிங் என்று கூறிச் சிரிக்கிறார்கள் அதிமுகவினர்.

click me!