முரசொலி நாளிதழின் பவள விழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதன் முதல் கட்டமாக கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி காட்சி அரங்கத்தை இந்து என்.ராம் திறந்து வைத்தார்.
துண்டறிக்கையாக திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டதுதான் முரசொலி.
துண்டறிக்கை, வாரஇதழ், பின் நாளேடு எனப் பல்வேறு வடிவங்களை எட்டி தற்போது தனது 75 ஆண்டுகாலப் பயணத்தை வெற்றிகரமாக கடந்திருக்கிறது திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி.
இதையொட்டி இன்றும்இ நாளையும் முரசொலி நாளேட்டின் பவள விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தி.மு.க. தலைமை மிகப்பிரமாண்ட ஏற்பாடு செய்துள்ளது. இன்று சென்னை கலைவாணர் அரங்கத்திலும், நாளை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலும் விழா நடைபெறுகிறது.
இதன் முதல் கட்டமாக கோடம்பாக்கம் முரசொலி நாளிதழ் அலுவலகத்தில், முரசொலி காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை இந்து எம்.ராம் திறந்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் அந்த அரங்கத்தை பார்வையிட்டனர்.
இதையடுத்து இன்று மாலை கலைவாணர் அரங்கத்தில் பவள விழாவின் முதல் நாள் கூட்டம் நடைபெறுகிறது.