திமுக கூட்டணி ஜெயிக்க காங்கிரஸே காரணம்... ஒரே போடு போட்ட ப. சிதம்பரம்..!

By Asianet TamilFirst Published Mar 14, 2021, 9:12 PM IST
Highlights

திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறுவதற்கு காங்கிரஸே காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில்  பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்  பங்கேற்று பேசினார்.  “காங்கிரஸ் கட்சி பார்ப்பதற்கு சிறிய கட்சியாக தெரிந்தாலும், ஆழமான வேர்கள் உள்ளன. உலகம் முழுவதுமே 100 வாக்காளர்களில் 25 பேர் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போதுதான், யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, வாக்காளர்கள் முடிவெடுத்து வருகிறார்கள் என்று நினைப்பது தவறு. காங்கிரஸ் வாக்காளர்கள் எல்லாருமே சைலன்ட் வாக்காளர்கள்.
கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இல்லாவிட்டால் அவர்கள் (திமுக) சில இடங்களில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால், கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறுவதற்கு காங்கிரஸே காரணம். அவர்கள்தான் (திமுக) பெரிய கட்சி. நாம் சிறிய கட்சிதான். நாம் பெரிய கட்சியை மதித்தால், அவர்கள் சிறிய கட்சியை மதிப்பார்கள். பெரிய மருது, சின்ன மருது சேர்ந்தால்தான் வெற்றி. அதுபோல அவர்களும் (திமுக), நாமும் (காங்கிரஸ்) சேர்ந்தால்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் ஒரே ஒரு சட்டப்பேரவைத் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. கூடுதலாகக் கிடைத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இந்த முறை சிவகங்கை, மானாமதுரையை பெற முயற்சித்தோம். ஆனால் கிடைக்கவில்லை. கடந்த முறை சிவகங்கை மக்களவை தொகுதியில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளை வென்றேம். இந்த முறை ஆறு தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும்.” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
 

click me!