பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு சார்பில் 1300 கோடி நிதி ஒதுக்கி, பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டை தார்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் ஆகியோருக்கு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேசன் அடைகளிலும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்களுக்கு வழங்கிய தொகுப்பில் பொருட்கள் தரமற்ற வகையில் இருந்ததாகவும் , சில இடங்களில் 21 பொருட்களுக்கு பதில் அதை விட குறைவாகவே பொருட்கள் இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் சில பகுதிகளில் வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் இடம்பெற்றிருந்த வெல்லம், ஒழுகிய நிலையில் தரமற்றதாக இருந்ததாக வீடியோ கூட வைரலானது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தரமான பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் பொங்கல் தொகுப்பிற்காகக் கூடுதல் விலை கொடுத்து பொருட்கள் வாங்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றஞ்சாட்டி வந்தனர். பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டே கொள்முதல் நடைபெற்றது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்க அளித்தார். ஆளும் அரசை குறைக்கூறும் நோக்கத்திலேயே ஓ.பி.எஸ். தவறான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார் எனவும் 2011- ஆம் ஆண்டு வரை வழங்கி வந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை 2012- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அரசு நிறுத்தியதாகவும் விமர்சித்தார். கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட கொரோனா நிவாரண நிதியையும், நிவாரண பொருட்களையும் தி.மு.க. அரசு வழங்கியதாக பேசினார்.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் நியாய விலை கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் எனறு உத்தரவு பிறப்பித்தார். இப்படி ஆரம்பம் முதலே பொங்கல் பரிசின் மீதான விமர்சனங்களும் அதற்கு விளக்கங்களும் வந்தபடியே இருந்தன. தற்போது பொங்கல் பண்டிகை முடிந்துள்ளதை அடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்களை வழங்கியிருப்பதாகவும், சில இடங்களில் 16 பொருட்களே வழங்கியுள்ளனர் என்று விமர்சித்ததுடன், இதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 1300 கோடி நிதியில் முறைகேடாக 500 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்தாண்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்திருந்ததில் கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் அரசு நிர்ணயித்திருந்தும் விவசாயிகளுக்குக் கரும்பு ஒன்றுக்கு 16 ரூபாய் மட்டுமே அரசு வழங்கியுள்ளது என்றும், கரும்பு கொள்முதலில் மொத்தமாக 34 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல், விநியோகம் தொடர்பாக புகார் எழுந்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.