தூத்துக்குடியை சிதைக்க வருகிறது துணை ராணுவம்!

First Published May 23, 2018, 4:02 PM IST
Highlights
The army comes to Tuticorin


தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்ப மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவிற்கு தலைமை செயலர் கிரிஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். கிரிஜா வைத்தியநாதனின் வேண்டுகோளை அடுத்து, மத்திய துணை ராணுவம் விரைவில் தமிழகம் வருகிறது.

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. 100-வது நாளான நேற்று, பொதுமக்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்தை நோக்கி  பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிறகு அது, கலவரமாக மாறியது. கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கினர். இதனால், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் பலியாகினர்.  படுகாயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இந்த தடை உத்தரவு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ளது அதனால் உடலை பார்க்க உறவினர்கள் குவிந்தனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு எதிராக காவல்துறை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் மீண்டும் 2 முறை வானை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசினர். மேலும் காவலர் வாகனத்திற்கு தீ வைத்து தப்பியோடினர் பின் 50 வாகனத்தில் காவல்துறையின் அணிவகுப்பு நடத்தி மக்களை ஒன்று கூட வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர். 

இந்த நிலையில் அண்ணா நகரில் துப்பாக்கி சூட்டினை தற்போது நடத்தியுள்ளது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இறந்தவர் பெயர் காளியப்பன் (22) எனத் தெரியவந்துள்ளது. அண்ணா நகரில் காவல் துறையினர் வீடுவீடாக சோதனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் இதுவரை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழக போலீஸ் திணறி வருகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கலவர மாவட்டமாக மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் போர்க்களமாக மாறியுள்ள நிலையில் தமிழக அரசு முற்றிலும் செயலிழந்தாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடி நிலைமையை மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, கிரிஜா வைத்தியநாதனிடம் கேட்டறிந்தார். மத்திய படைகளை அனுப்ப தயார் எனவும் ராஜீவ் கவுபா உறுதி அளித்துள்ளார்.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களை ஒடுக்க மத்திய துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. அதேபோன்ற ஒரு நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை ராணுவ உதவியை தமிழக அரசு நாடியுள்ளது.

click me!