தேர்தல் நேரத்தில் திமுக எடுத்த அதிரடி... இதற்காகவே புதிய அணி தொடங்கி தொறிக்கவிட்ட துரை முருகன்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 23, 2020, 1:16 PM IST
Highlights

ஆட்சியாளர்களின் அணுகுமுறையினை தட்டிக்கேட்டு திருத்துவதற்கும், தேவைப்படும்போது போராடுவதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு அணியை உருவாக்கிட வேண்டுமென்ற நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

திமுக சுற்றுச்சூழல் அணி என்னும் புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மாநில செயலாளராக திரு. கார்த்திகேய சேனாபதி அவர்கள் தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் எனவும், நிர்வாகிகள் பின்னர் அறிவிக்கப்படுவர் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்நிலையில், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழலுக்காக பாடுபடும் சமூகநல அமைப்புகள், கழக மாவட்டச் செயலாளர்கள், திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அணிக்கு மாபெரும் ஆதரவினை அளித்திட வேண்டுமென திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: 

மனித சமுதாயத்திற்கு அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாக சுற்றுச்சூழல் முக்கிய பங்காற்றுகிறது. வளர்ச்சியும், சுற்றுச்சூழலும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று இணையாக ஒன்றை மற்றொன்று உரசிக்கொள்ளாமல் பயணிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு. மற்றும் இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. எனினும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக் கொள்கை 2020 உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழலை பாதிக்கும் நடவடிக்கைகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவசாயிகளின் வேளாண்மையை கெடுக்கும் செயல்பாடுகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடுகின்றன. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மத்திய மாநில அரசுகளின் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான, எதிர்காலம் குறித்த எண்ணம் சிறிதும் இல்லாத நடவடிக்கைகள் மனித குலத்திற்கு சவால் விடுவதாகவும், வேளாண் நிலங்களை பறிப்பதாகவும்,  சிறு குறு நடுத்தர விவசாயிகள் தமது உயிருக்கு நிகராக போற்றி வைத்திருக்கும் நிலங்களை சர்வாதிகாரமாக எடுத்துக்கொள்ளும் போக்கினை அரசுகள் கையாள்வது அதிகரித்து வருகிறது. 

இந்தக் கொடிய செயல் அடுத்து அடுத்து வரும் தலைமுறைக்கே பேர் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. சுற்றுச்சூழல் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல், கார்ப்பரேட் முதலாளிகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வரப்படும் திட்டங்களால் ஏற்கனவே தமிழ்நாடு பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை, சேலம்-சென்னை எட்டு வழி சாலை, தமிழ்நாடு முழுவதும் எண்ணெய் கிணறுகள். போதாக்குறைக்கு இப்போதும் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் என்று சுற்றுச்சூழல், கடல் வளமும், நில வளம் ஆகியவற்றிற்கு எதிரான ஆட்சியாளர்களின் அணுகுமுறையினை தட்டிக்கேட்டு திருத்துவதற்கும், தேவைப்படும்போது போராடுவதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு அணியை உருவாக்கிட வேண்டுமென்ற நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 

அதனடிப்படையில் கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் திமுக சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு அதன் மாநிலச் செயலாளராக திரு.கார்த்திகேய சேனாபதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கழகத்தின் தளகர்த்தர், கொங்கு நாட்டின் தலைதாழா சிங்கம், தன்மான முரசு, தமிழினத்தின் சுடரொளி என்றெல்லாம் பலப்பட பாராட்டப்பட்ட மறைந்த குட்டப்பாளையம் மறைந்த சாமிநாதன் அவர்களின் பெயரன், பல்லுயிர் மற்றும் பாரம்பரிய கால்நடை பாதுகாப்பிற்காக பாடுபட்டு வரும் இவர் நீரின்றி அமையாது உலகு என்று கல்லூரி மாணவர்களிடையே மழைநீர் சேமிப்பு குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஐக்கிய நாடுகளின் உணவு மேலாண்மை அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ரியோ உச்சிமாநாட்டில் நிலையான வளர்ச்சித் திட்டம் ஆகிய பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று சொற்பொழிவாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். ஆகவேதான் மிகப்பொருத்தமான இவரது பொறுப்பில்  சுற்றுச்சூழல் அணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழலை காக்க பாடுபடும் சமூகநல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் கழக மாவட்ட செயலாளர்களும் திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அணிக்கு மாபெரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் இணை கோடுகளில் பயணிப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் இந்த நிலைக்கு மாறாக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதை ஜனநாயக பூர்வமாக எதிர்த்து அறவழியில் போராடி மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்த அணி பாடுபடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!