
அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு விரைவில் நடைபெறும் என்றும் இந்த இணைப்பை யாராலும் தடுக்க முடியாது என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் கட்டிக்காத்து வந்த அதிமுக அவரது மறைவுக்கும் பிறகு இரண்டாக உடைந்தது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என போட்டிபோட்டுக்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலும், இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் டெல்லி திஹார் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்லையில் இரு அணிகளையும் இணைப்பது குறித்து பேச்சு எழுந்தது. ஆனால் இரு அணி தலைவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசியதால் பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் அரூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவின் இரு அணிகளும் கட்டாயமாக இணைக்கப்படும் என தெரிவித்தார்.
செம்மலை ஒருவர் சொல்வதை வைத்து கட்சி, ஆட்சி குறித்து அந்த முடிவும் எடுக்க முடியாது என கூறிய தம்பிதுரை, அணிகள் இணைவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
அதே நேரத்தில் தங்கள் அணியில் உள்ள 122 எம்எல்ஏக்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களே முதலமைச்சர் என்றும் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்தார்.