இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி.. சினிமா வசனத்தை சிரிக்காமல் சீரியஸாக பேசிய தம்பிதுரை

First Published Apr 3, 2018, 1:09 PM IST
Highlights
thambidurai blames dmk in cauvery issue


முதல்வர், துணை முதல்வர் தலைமையிலான உண்ணாவிரதத்தை நீர்த்துப்போக செய்வதற்காகவே திமுகவினர் மறியல் போராட்டம் நடத்துவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 9ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்பதில் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கின்றனர். அதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வலுத்துள்ளன.

விவசாயிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக சார்பில் தினமும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு, ரயில் மறியல், சாலை மறியல் என தமிழகம் முழுவதுமே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.

ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடந்துவருகிறது. அதேபோல அமைச்சர்கள் தலைமையில், மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்துவருகிறது. 

இதற்கிடையே திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் ஆகிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திமுக சார்பில் தினமும் மறியல் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காவிரியில் தமிழகத்தின் உரிமைக்காக உண்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் போராடுவது அதிமுக தான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காவிரி உரிமைக்காக போராடினர். அவர்களின் வழியில் தற்போதைய அதிமுகவும் போராடி வருகிறது.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதற்காக திமுக போராட்டம் நடத்தவில்லை. திமுகவினர் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். காவிரி விவகாரம் முடிவுக்கு வரக்கூடாது என்பதே திமுகவின் நோக்கம்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்துவருகிறது. அந்த போராட்டத்தை நீர்த்துப்போக செய்து கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காகவே மறியல் போராட்டங்களை திமுகவினர் நடத்துகின்றனர் என தம்பிதுரை குற்றம்சாட்டினார்.
 

click me!